மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா அகரஆதனூர் கிராமத்தில் உள்ள புற்றடி மாரியம்மன் கோயிலின் 89 ஆம் ஆண்டு தீமிதி திருவிழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. விழாவை முன்னிட்டு கடந்த 02 ஆம் தேதி பூச்சொரிதலுடன் காப்பு கட்டி விழா துவங்கியது. …தீமிதி திருவிழாவை முன்னிட்டு தினந்தோறும் அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று வீதியுலா கட்சி நடைபெற்றது. 15ஆம் நாள் திருவிழாவான தீமிதி திருவிழாவை முன்னிட்டு பெரிய குளக்கரையிலிருந்து மேள வாத்தியங்கள் முழங்க சக்தி கரகம் சிறப்பு அலங்காரத்தில் புறப்பட்டு காப்பு கட்டி மஞ்சள் உடை உடுத்தி விரதமிருந்த பக்தர்கள் ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர். தொடர்ந்து கோயில் முன்பு அமைக்கப்பட்ட பூக்குழியில் சக்திகரகம் இறங்கியதை தொடர்ந்து பெண்கள் மற்றும் அறங்காவலர் குடும்பத்தினர் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீக்குழியில் இறங்கி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். பக்தர்கள் ஏராளமானோர் தங்களது கைக்குழந்தைகளை தூக்கிக் கொண்டு தீ மிதித்தது காண்போரை மெய்சிலிர்க்க வைத்தது. பெண்கள் மாவிளக்கு தீபமிட்டு அம்மனை வழிபாடு செய்தனர். இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்பாளை தரிசனம் செய்தனர். தொடர்ந்து தீக்குழி முன்பு சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி சுவாமிக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இரவு வீதிஉலா நிகழ்ச்சி நடைபெற்றது.
மயிலாடுதுறை அருகே அகரஆதனூர் புற்றடி மாரியம்மன் திருக்கோயில் 89 ஆம் ஆண்டு தீமிதி திருவிழா.



