கோவை மாவட்டம் மருதமலை முருகன் கோவிலுக்கு வருகை புரிந்த அமைச்சர் சேகர் பாபு பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டார் அதனை தொடர்ந்து செய்தி யாளர்களிடம் கூறியதாவது
கோவிலுக்கு வரும் பக்தர்களின் நலன் கருதி தற்போது உள்ள தற்காலிக பேருந்து நிலையத்தை நிரந்தரமாக்குதல்,மழைக்காலங்களில் பக்தர்கள் சிரமமின்றி வந்து செல்லும் வகையில் புதிய பேருந்து நிலையம் அமைத்தல், அங்கு இருந்து கோவிலுக்கு செல்லும் பாதையின் இருபுறமும் நிழல் தரும் கூரையுடன் கூடிய கண்ணாடி நடைபாதை அமைத்தல் ஆகிய திட்டங்கள் வகுக்கப்பட்டு உள்ளன என்றும் இப்பகுதியில் நடைபெற்று வரும் மின் தூக்கி அமைக்கும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டு,ஜூலை மாதத்திற்குள் பக்தர்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்று தெரிவித்தார்.
ஆசியாவிலேயே மிக உயரமான,184 அடி உயரம் மற்றும் 80 – க்கு 60 சுற்றளவு கொண்ட முருகர் சிலை நிறுவப்பட உள்ள இடத்தையும் அமைச்சர் மற்றும் இந்து சமய அறநிலையத் துறை ஆணையாளர், கோவை மாவட்ட ஆட்சித் தலைவர், திருக்கோவில் அறங்காவலர் குழுவினர் ஆகியோர் ஆய்வு செய்தனர்.மேலும் மருதமலைக்கு சொந்தமான இடங்களில் இருக்க கூடிய உயர் நிலைப் பள்ளிகள் இங்கு பாலிடெக்னிக் கல்லூரி அமைக்க வேண்டும் என்ற கொடுத்த கோரிக்கையை ஏற்று, பாலிடெக்னிக் கல்லூரி அமைப்பதற்கான இடத்தையும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
பக்தர்களின் தேவைகளை முழுமையாக பூர்த்தி செய்வதற்கே இந்த அரசு செயல்பட்டு வருவதாகவும், தற்போது பக்தர்கள் அதிக அளவில் வருகை தருவதால் அவர்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதில் அரசு முனைப்புடன் செயல்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்



