திருவாரூர், டிசம்பர் 4 –
டிட்வா புயல் காரணமாக திருவாரூர் மாவட்டம் முழுவதும், கடந்த ஒரு வார காலமாக பெய்த கனமழையினால் சம்பா – தாளடி சாகுபடி செய்யப்பட்ட இளம் நெல் பயிர்கள் மழை நீரில் மூழ்கி அழுகிய நிலையில் உள்ளது.
தமிழ்நாடு முதல்வரின் ஆணைக்கிணங்க திருவாரூர் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, மாவட்ட கலெக்டர் மோகனச்சந்திரன்,
சட்டமன்ற உறுப்பினர்கள் பூண்டி.கலைவாணன், மாரிமுத்து, நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ் உள்ளிட்டோர் ஆய்வு செய்து பாதிப்பு குறித்து அரசுக்கு தெரியப்படுத்தினர்.
இதன் தொடர்ச்சியாக ஹெக்டருக்கு இருபதாயிரம் இழப்பீடாக வழங்கப்படுமென தமிழக அரசு நேற்றைய தினம் அறிவித்தது. ஏக்கருக்கு முப்பதாயிரம் செலவு செய்துள்ள நிலையில், “யானை பசிக்கு சோளப்பொறி” என்பது போல் இந்த தொகை போதுமானதாக இல்லையென்பதால், அரசு அறிவித்த தொகையை மறு பரிசீலனை செய்து கூடுதலாக உயர்த்தி வழங்க வேண்டுமென விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
அதே போல் பெயரளவுக்கு நிவாரணம் என்றில்லாமல், பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் நிவாரணத் தொகை சென்றடைய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுக்கின்றனர். மழை ஒருநாள் இடைவெளி விட்டிருந்த நிலையில் “வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல்” திருவாரூர் மாவட்டம் முழுவதும் நேற்று மீண்டும் கனமழை பெய்ய தொடங்கியது.



