ஈரோடு, டிச. 1 –
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி மற்றும் பி எஸ் ஜி மருத்துவமனை வேளாளர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி ரோட்ராக்ட் சார்பில் ஈரோடு வீரப்பன் சத்திரம் காவேரி ரோட்டில் உள்ள தனியார் பள்ளியில் மருத்துவ முகாம் நடந்தது. இதை த.மா.கா மாநில பொது செயலாளர் யுவராஜா தொடங்கி வைத்தார்.
இதன் பிறகு அவர் நிருபர்களிடம் கூறியதாவது: ஈரோடு கிழக்கு தொகுதி பின் தங்கிய தொகுதியாக மாறிவிட்டது. பாதாள சாக்கடை திட்டம் இன்னும் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை. மேலும் ரோடு வசதி, சாக்கடை வசதி போன்ற அடிப்படை வசதிகள் கூட இங்கு நிறைவேற்றப்படவில்லை. எனவே வாக்காளர்கள் அதிருப்தியுடன் உள்ளனர்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் கூட்டணி கட்சி சார்பில் யார் போட்டியிட்டாலும் வெற்றி பெறுவது உறுதியாகிவிட்டது. வருகிற சட்டமன்ற தேர்தல் தமிழ்நாட்டில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். ஈரோடு கிழக்கு தொகுதி மட்டும் அல்லாமல் தமிழகம் முழுவதும் அதிமுக தலைமையிலான கூட்டணி மாபெரும் வெற்றி பெறுவது உறுதியாகிவிட்டது.
முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தமிழக வெற்றிக் கழகத்தில் சேர்ந்து உள்ளதால் அதிமுக கூட்டணிக்கு எந்த பாதிப்பும் வரப்போவது இல்லை. செங்கோட்டையனுக்கு வயதாகி விட்டதால் அவர் ஓய்வு எடுப்பது நல்லது. அவர் மட்டும் அல்ல; தமிழக வெற்றிக் கழகத்தில் யார் சேர்ந்தாலும் அக்கட்சி வெற்றி பெற முடியாது. தமிழ் நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியில்லை. இவ்வாறு அவர் கூறினார்.



