தமிழக வெற்றி கழகத்தை அரசியல் கட்சியாக பதிவு செய்து, தேர்தல் அரசியலில் பதிவு செய்யப்பட்ட கட்சியாக பங்குபெற தேர்தல் ஆணையம் இன்று அனுமதி வழங்கியது. மேலும், விக்கிரவாண்டியில் மாநாடு நடத்துவதற்கு காவல்துறை அனுமதி வழங்கியது. இதனை, மயிலாடுதுறையில் தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் நலத்திட்ட உதவிகளை வழங்கி கொண்டாடினர். மயிலாடுதுறையில் பேருந்து நிலையம் அருகில் உள்ள த.வெ.க மாவட்ட அலுவலகத்தில் இருந்து மாவட்ட தலைவர் சி.எஸ்.குட்டிகோபி தலைமையில் கட்சி கொடிகளுடன் ஊர்வலமாக சென்று, கிட்டப்பா அங்காடி பகுதியில் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடினர். தொடர்ந்து, ஏழை மக்களுக்கு வேட்டி, சேலை ஆகிய நலஉதவிகளை வழங்கினர். தொடர்ந்து, விக்கிரவாண்டி மாநாடு குறித்து பொதுமக்களிடம் விளக்கிக்கூறி அழைப்பு விடுத்தனர். இதில் கட்சி நிர்வாகிகள் மாவட்ட செயலாளர் தளபதி ஆமீன், மாவட்ட இளைஞரணி தலைவர் ராஜ்குமார், மாவட்ட இணைச்செயலாளர் ஆரிவரசன், மற்றும் மாவட்ட ஒன்றிய தலைவர்கள் மாவட்ட ஒன்றிய செயலாளர்கள் உள்ளிட்ட தொண்டர்கள் நூற்றுக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.



