நாகர்கோவில், டிசம்பர் 4 –
நாகர்கோவிலில் பிரசித்தி பெற்ற கோட்டாறு புனித சவேரியார் பேராலய திருவிழா கடந்த மாதம் 24ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் காலையில் திருப்பலி, மாலையில் ஆடம்பர கூட்டு திருப்பலி நடந்தது. 9ம் திருவிழாவை ஒட்டி இரவில் தேர் பவனி நடந்தது. தேர்கள் முன் செல்ல பக்தர்கள் கும்பிடு நமஸ்காரம் செய்து வழிபட்டனர். முன்னதாக சிறப்பு மாலை ஆராதனை, நற்கருணை ஆசீர் நடந்தது. இதில் கோட்டாறு மறை மாவட்ட ஆயர் நசரேன் சூசை பங்கேற்று மறையுரை நிகழ்த்தினார். இந்த நிகழ்விலும் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
நேற்று (3ம் தேதி) பத்தாம் நாள் திருவிழா நடந்தது. இதையொட்டி காலை 6 மணிக்கு பெருவிழா திருப்பலி நடந்தது. இதில் கோட்டார் மறை மாவட்ட ஆயர் நசரேன் சூசை பங்கேற்றார். பின்னர் காலை 8 மணிக்கு மலையாளத் திருப்பலி நடந்தது. பின்னர் மாலை 11 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது. காவல் தூதர், புனித செபஸ்தியார், புனித சவேரியார், மற்றும் மாதா ஆகிய நான்கு தேர்கள் வலம் வந்தன.
தேரோட்டத்தை காண ஆயிரக்கணக்கானவர்கள் குவிந்தனர். நேற்று காலையில் இருந்து அதிகளவில் பக்தர்கள் வந்தனர். திருவிழாவையொட்டி குமரி மாவட்டத்திற்கு நேற்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. கூட்ட நெரிசலை பயன்படுத்தி பக்தர்களிடம் திருட்டு உள்ளிட்ட சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க தனிப்படை போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். நேற்று இரவு 7 மணிக்கு தேரில் ஆடம்பர கூட்டு திருப்பலி நடந்தது.
குழித்துறை மறை மாவட்ட ஆயர் ஆல்பர்ட் அனஸ் தாஸ் பங்கேற்று மறையுரை நிகழ்த்தினார். அத்துடன் திருவிழா நிறைவடைந்தது. பேராலய திருவிழாவையொட்டி நாகர்கோவில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது. கோட்டார் காவல் நிலைய சந்திப்பில் இருந்து திருவிழாக்கடைகள் அமைக்கப்பட்டு இருந்தன. இந்த திருவிழா கடைகளில் பொருட்கள், மிட்டாய்கள், இனிப்பு வகைகளை மக்கள் ஆர்வமுடன் வாங்கி சென்றனர். வரும் 8 ம் தேதி மாலை 5 மணிக்கு திருப்பலி நடக்கிறது. பின்னர் திருக்கொடியிறக்க நிகழ்வு நடைபெறும்.



