கருங்கல், டிச. 26 –
குமரி மாவட்டத்தில் கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு விழாக்கள் அனைத்து பகுதிகளிலும் வெகு விமர்சையாக கொண்டப்படுவது வழக்கம். குறிப்பாக பிரமாண்ட குடில்கள், மின்விளக்கு அலங்காரங்கள் செய்து புத்தாண்டு வரை கொண்டாடி வருகின்றனர். இவற்றை காண உள்ளுர் மற்றும் வெளியூர், கேரளாவில் இருந்தும் ஏராளம் பேர் வாகனங்களில் வந்து கண்டு களிப்பது வழக்கம்.
இதனால் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுப்பதற்காக மாவட்டம் முழுவதும் 1500 போலீசார் குவிக்கப்பட்டு தீவிர சோதனையில் மாவட்ட காவல்துறை ஈடுபட்டு வருகிறது. மேலும் போலீசார் நாள் முழுவதும் ரோந்து பணியில் ஈடுபட்டிருக்க வேண்டும் என மாவட்ட எஸ்பி ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு கருங்கல் அருகே ஆலஞ்சி பகுதியில் சுமார் 25க்கும் மேற்பட்ட பைக்குகளில் வாலிபர்கள் அந்த பகுதியில் வந்து திரண்டனர். பின்னர் அந்த வாலிபர்கள் திடீரென பைக் ரேஸில் ஈடுபட்டதுடன், வீலிங் செய்து அதிக சத்தத்தை எழுப்பினர். இதனால் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகிய அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் இதை தட்டி கேட்டுள்ளனர். இதைக் கண்டு கொள்ளாத அந்த வாலிபர்கள் மீண்டும் வீலிங் செய்து ரகளையில் ஈடுபட்டனர். இதனை அறிந்த அப்பகுதி பொதுமக்கள் வாலிபர்களை தட்டி கேட்டு, பின்னர் பைக் ரேஸில் ஈடுபட்ட அடாவடி செய்த வாலிபர்களை கிராம மக்கள் துரத்தி அடித்தனர்.
இதுகுறித்து உடனடி கருங்கல் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் அதிரடிப் படையுடன் சம்பவ இடம் சென்றனர். தகவல் அறிந்து அங்கு இருந்து வாலிபர்கள் பைக்கையும் விட்டு விட்டு தப்பி ஓடினர். அதிரடிப்படையினர் பைக்கில் ஈடுபட்ட வாலிபர்களை பிடிக்க முயன்றதில் வாலிபர் ஒருவர் அதிவேகமாக பைக்கை ஒட்டியதால் அதிரடிப்படையை சேர்ந்த காவலர் அருள்ராஜ் (36) என்பவர் படுகாயம் அடைந்து அவர் குமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கிறது. போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.



