நாகர்கோவில், நவ. 10 –
நாகர்கோவில் புன்னைநகர் பகுதியில் ஒரு பிரபல தனியார் மருத்துவமனை உள்ளது. இங்கு விருதுநகர் மாவட்டம் சிவகாசி பகுதியை சேர்ந்த 19 வயதான இளம் பெண் ஒருவர் செவிலியராக பணியாற்றி வருகிறார். இந்த மருத்துவமனையின் தலைமை மருத்துவராக இருப்பவர் டாக்டர் ராதாகிருஷ்ணன். இவர் குமரி அரசு மருத்துவக் கல்லூரியின் முன்னாள் டீன் ஆவார். புன்னை நகரில் உள்ள மருத்துவமனைக்கு பின்புறம் தான் இவரது வீடு அமைந்துள்ளது. தற்போது இவரது தாயாருக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறப்படுகிறது.
நேற்று முன்தினம் 8 ம் தேதி காலை வழக்கம் போல் டாக்டர் ராதாகிருஷ்ணன் வீட்டில் உள்ள அவரது தாயாருக்கு செவிலியர் பணிவிடைகள் செய்து கொண்டிருந்தார். அப்போது வீட்டின் டைனிங் டேபிளில் இருந்தவாறு டாக்டர் ராதாகிருஷ்ணன் செவிலியரிடம் தனக்கும் டீ தருமாறு கேட்டுள்ளார். இதை அடுத்து செவிலியர் டீ போட்டுக் கொண்டு கொடுத்துள்ளார். டீயை குடித்துவிட்டு நன்றாக உள்ளது என்று கூறிக்கொண்டு செவிலியர் கையை பிடித்து இழுத்து பாலியல் தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. இதை வெளியே கூறக்கூடாது என்று மிரட்டியும் உள்ளாராம்.
இது குறித்து பாதிக்கப்பட்ட செவிலியர் தனது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் அன்று இரவு நேசமணிநகர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு சம்பந்தப்பட்ட டாக்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி வலியுறுத்தினர். இதை அடுத்து தற்போது செவிலியர் அளித்த புகாரின் பேரில் டாக்டர் ராதாகிருஷ்ணன் மீது பி என் எஸ் இரண்டு சட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். வழக்கு பதிவானதை தொடர்ந்து டாக்டர் ராதாகிருஷ்ணன் தலைமறைவானதாக கூறப்படுகிறது.



