தருமபுரி நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டத்தின் கீழ் ரூ.82.15 கோடி மதிப்பீட்டில் கழிவு நீர் குழாய் பதிக்கும் பணி மற்றும் கழிவு நீரேற்றம் நிலையம் அமைக்கும் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஷ் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். தருமபுரி நகராட்சியில் உலக வங்கி நிதி யுதவியுடன் ஒருங்கிணைந்த பாதாள சாக்கடைத் திட்டம் 202 3 -2024-ன் கீழ் 14 வார்டுகளை உள்ளடக்கிய நகராட்சி பகுதிகளில் ரூ.82.15 கோடி மதிப்பீட்டில் சுமார் 46 கிலோ மீட்டர் நீளத்திற்கு கழிவுநீர் குழாய் பதிக்கும் பணி மற்றும் கழிவு நீரேற்றம் நிலையம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக அனசாகரம் பகுதி வார்டு எண் 23-ல் 2.50 மீட்டர் விட்டம், 3.30 மீட்டர் ஆழம் கொண்ட சேகரிப்பு தொட்டியுடன் கழிவுநீரேற்றம் நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பாதாள சாக்கடை திட்ட பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த பணிகளை திட்டமிட்டபடி முறையாக மேற்கொள்ள வேண்டும் என்று கூறினார். இதை தொடர்ந்து வெடியப்பன்திட்டு பகுதியான 24-வது வார்டில் கழிவு நீர் குழாய் பதித்தல் மற்றும் எந்திர கழிவுநீர் சேகரிப்பு குழி கட்டுமான பணிகளை அவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு இந்த பணிகளை குறிப்பிட்ட காலத்திற்குள் விரைந்து முடித்து பொது மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இதைத்தொடர்ந்து அந்தப் பகுதியில் உள்ள சனத் குமார் நதியை பார்வையிட்ட ஆட்சித் தலைவர் அங்கு தேங்கியுள்ள குப்பைகளையும், கட்டிட கழிவுகளையும் அகற்றுவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு நகராட்சி மற்றும் பொதுப்பணித்துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். பின்னர் ஆட்சி தலைவர் தருமபுரி தாலுகா அலுவலகத்தில் திடீரென ஆய்வு மேற்கொண்டு அங்கு பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகளை பார்வையிட்டார். மேலும் பொது மக்களின் தகுதியான கோரிக்கை மனுக்கள் மீது காலதாமதத்தை தவிர்த்து உரிய நேரத்தில் நடவடிக்கை மேற்கொண்டு கோரிக்கைகளை நிறைவேற்றிட வேண்டும் என்று அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார். இந்த ஆய்வின்போது
நகராட்சி தலைவர் லட்சுமி நாட்டான்மாது, நகராட்சி ஆணையாளர் சேகர், நகராட்சி பொறியாளர் புவனேஸ்வரி, உதவி பொறியாளர்
மாலதி, நகர் நல அலுவலர் லட்ஷியவர்ணா, துப்புரவு அலுவலர் ராஜ ரத்தினம் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.