நாகர்கோவில் ஆக 12
இராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியம் – தர்மபுரமம் இலந்தையடிதட்டு மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடத்தில் 18-ம் ஆண்டு ஆடி பூரம் திருவிழா, கஞ்சி கலசம், பாலபிஷேகம் மற்றும் கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டம் 2023-2024-ன் கீழ் ரூ. 25 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட திறந்தவெளி இரும்பு கொட்டகை திறப்பு விழா நேற்று காலை நடைபெற்றது. இவ்விழாவிற்கு இராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் அய்யப்பன் தலைமை வகித்தார். முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினருமான என்.தளவாய்சுந்தரம், ரூ. 25 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட திறந்தவெளி இரும்பு கொட்டகையினை திறந்து வைத்து பேசும் போது கூறியதாவது:-
இப்பகுதி மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் ரூ. 25 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட திறந்தவெளி இரும்பு கொட்டகை திறப்பு விழாவில் கலந்து கொள்வதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். இங்கு அனைவரும் சமம் என்ற எண்ணத்துடன் தான் திருக்கோயிலுக்கு வருகிறோம். இச்சக்தி பீடமானது ஆன்மீகம் கலந்த சமூக சேவையினை சிறப்புடன் ஆற்றி வருகிறது. சக்தி பீடம் பொது சேவைக்கான சிறப்பான இடமாக விளங்கி வருகிறது. சக்தி பீட பொறுப்பாளர்களுக்கு எனது நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன். அனைவருக்கும் அம்மன் அருள் கிடைத்து வளம் பெருகட்டும் இல்லாமை அகலட்டும் என அவர் பேசினார்.
தர்மபுரம் ஊராட்சி 7-வது வார்டு உறுப்பினர் செல்லபெருமாள் வரவேற்று பேசினார். இராஜாக்கமங்கலம் கிழக்கு ஒன்றிய கழகச் செயலாளர் வீராசாமி, ஒன்றிய 10-வது வார்டு கவுன்சிலர் புனிதாகலையரசன், தர்மபுரம் ஊராட்சி முன்னாள் தலைவர் செல்வகுமார், வார்டு உறுப்பினர் பரமேஷ், சக்தி பீடம் தலைவர் சக்தி மந்திரபிள்ளை, துணைத்தலைவர் சக்தி முருகேசன், செயலாளர் சக்திவேல் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். பொருளாளர் சக்தி விநாயகராம் போஸ் நன்றியுரையாற்றினார்.
முன்னதாக ஆடிப் பூரம் பெருவிழாவை முன்னிட்டு மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் நடைபெற்ற கஞ்சி கலசத்தை தளவாய்சுந்தரம் தொடங்கி வைத்தார். இவ்விழாவில் சக்தி செல்லக்கண், சிவந்தி ஆதித்தனார் கல்லூரி கண்காணிப்பாளர் கனகராஜ், கழக நிர்வாகிகள் ராஜன், பசிலியான் நசரேத், சுகுமாரன், சாந்தினி பகவதியப்பன், பார்வதி, வழக்கறிஞர் சுந்தரம், முத்துக்குமார், அக்ஷயாகண்ணன், பறக்கை கோசலை, விஜயன், முருகன், கனகராஜ், காட்வின், கந்தன், குமரேசன், உட்பட பலர் கலந்து கொண்டனர்.