ஏ.எஸ்.பி.யிடம் கவுன்சிலர் ராஜாராம் பாண்டியன் மனு கொடுத்துள்ளார்!
ராமநாதபுரம், அக்.17-
ராமநாதபுரம் நகரில் ரோட்டில் ஏற்பட்டுள்ள பள்ளங்களால் விபத்து ஏற்படுவதால் போக்குவரத்தில் தற்காலிக மாற்றம் செய்ய வேண்டும் என்று நகராட்சி கவுன்சிலர் ராஜாராம் பாண்டியன் ராமநாதபுரம் உதவி காவல் கண்காணிப்பாளரிடம் கோரிக்கை மனு வழங்கியுள்ளார்.
ராமநாதபுரம் காவல் துறை ஏ எஸ் பி சிவராமன் அவர்களை சந்தித்து காங்கிரஸ் கவுன்சிலர் ராஜாராம் பாண்டியன் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
ராமநாதபுரம் நகருக்குள் வந்து செல்லும் அனைத்து அரசு மற்றும் தனியார் பேருந்துகள் மீனி பேருந்துகள் பயணிகளை அரண்மனை பகுதியில் இறக்கிவிட்டு நயினார் கோவில் ரோடு வழியாக சென்று யானைகல் தெருவில் நிறுத்துகின்றனர். பிறகு அங்கிருந்து சிக்கந்தர் தெரு, ஈஷா பள்ளிவாசல் தெரு, அலங்கச்சேரி தெரு ஆகிய குடியிருப்பு பகுதி வழியாக மத்திய கொடி கம்பம் பகுதியில் பயணிகளை
ஏற்றுக்கொண்டு காசு கடை பஜார், சிகில் ராஜவீதி , சுவாமி விவேகானந்தர் தெரு, கேணிக்கரை வழியாக செல்கின்றன. ராமநாதபுரம் நகர் 5வது வார்டுக்கு உட்பட்ட சிக்கந்தர் தெரு ஈஷா பள்ளிவாசல் தெரு, அலங்கச்சேரி தெரு வழியான ரோடு பழைய சந்தோஷ தியேட்டர் முதல் நகர் மத்திய கொடி கம்பம் வரை மிகவும் சேதம் அடைந்து குண்டும் குழியுமான நிலையில் உள்ளது. இந்தப் பள்ளங்களை நகராட்சி உதவியுடன் பலமுறை இடிபாடுகளை கொட்டி சரி செய்தும் மழை பெய்யும் நேரங்களில் பேருந்து போக்குவரத்தால் மீண்டும் பள்ளங்கள் ஏற்பட்டு மழை நீர் அதிகமாக தேங்கி வாகனங்கள் செல்ல முடியாத அவல நிலை ஏற்படுகிறது. மேலும் இந்த வழியாக செல்லும் இருசக்கர வாகனங்கள், நடந்து செல்பவர்கள், சைக்கிளில் செல்லும் பள்ளி மாணவர்கள், முதியோர்கள் இந்த பள்ளங்களில் அடிக்கடி விழுந்து காயம் அடைவதும் வேதனையான வாடிக்கையான நிலையாக தொடர்கிறது.
எனவே ராமநாதபுரம் நகராட்சி நிர்வாகம் இந்த ரோட்டை சரி செய்யும் வரையில் இந்த பகுதியில் ஏதேனும் அசம்பாவிதம் நடக்காமல் தவிர்க்கும் பொருட்டும். பொதுமக்களின் நலன் கருதியும் இந்தப் பகுதியில் செல்லும் அனைத்து வாகனங்களையும் மாற்று பாதையில் திருப்பி போக்குவரத்தில் மாற்றம் செய்ய வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல் நகராட்சி கமிஷனரிடம் “நகராட்சியில் குழாய் பதிக்கும் பணியை துரிதப்படுத்தி விரைவில் சாலை அமைத்திட வேண்டும்” என்ற, கோரிக்கையை முன் வைத்துள்ளார்.