நாகர்கோவில் ஜன 28
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில், மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா, தலைமையில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது.
இதில், பொது மக்களிடமிருந்து கல்வி உதவித்தொகை, பட்டா பெயர் மாற்றம், மாற்றுத்திறனாளி நல உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் கோரி 553 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட அனைத்து கோரிக்கை மனுக்கள் மீது விரைந்து தீர்வு காணுமாறு மாவட்ட ஆட்சியர் துறைசார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
அதனைத்தொடர்ந்து ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டத்தின் கீழ் அங்கன்வாடி மையங்களில் 10 ஆண்டுகள் உதவியாளராக பணிபுரிந்து, 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 12 உதவியாளர்களுக்கு அங்கன்வாடி பணியாளர் பதவி உயர்வுக்கான பணி ஆணைகள் வழங்கினார்.
நடைபெற்ற கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (நிலம்) செந்தில்வேல்முருகன், தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) சேக் அப்துல்காதர், நாகர்கோவில் நகர துணை காவல் கண்காணிப்பாளர் பாலாஜி, மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ஜெயந்தி, அரசு அலுவலர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.