தருமபுரி மாவட்டம், அரூர் தாலுகா, வள்ளி மதுரை கிராமத்தில் உள்ள வரட்டாறு அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமை தாங்கி பாசனத்திற்கு தண்ணீர் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் நீர்வள ஆதாரத்துறை செயற் பொறியாளர் செந்தில்குமார், உதவி ஆட்சியர் சின்னசாமி, உதவி செயற்பொறியாளர் ஆறுமுகம், தாசில்தார் பெருமாள், உதவி பொறியாளர் பிரபு, அரூர் பேரூராட்சி துணைத் தலைவர் சூர்யா தனபால், திமுக நகர செயலாளர் முல்லை ரவி மற்றும் அரசு அலுவலர்கள் ,விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இந்த அணையில் இருந்து பாசனத்திற்காக திறக்கப்படும் தண்ணீர் மூலம் பழைய ஆயக்கட்டு பகுதிகளில் உள்ள 11 ஏரிகளுக்கு தொடர்ந்து 20 நாட்களுக்கு வினாடிக்கு 30 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்படும். புதிய ஆயக்கட்டு பகுதிகளில் உள்ள 14 ஏரிகளுக்கு பாசனத்திற்கு 20 நாட்களுக்கு வினாடிக்கு 30 கன அடி விதம் தண்ணீர் திறக்கப்படும். மொத்தம் 40 நாட்களுக்கு 5,108 ஏக்கர் நிலங்கள் பயன்பெறும் வகையில் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. 25 ஏரிகள் மூலம் பழைய ஆயக்கட்டு பகுதியான 2,555 ஏக்கர் நிலமும், புதிய ஆயகட்டு பகுதியான 2,853 ஏக்கர் நிலமும் பாசன வசதி பெறுகிறது .இதன் மூலம் வள்ளி மதுரை, தாதரவலசை, சாமநத்தம், கீரைப்பட்டி, குடுமியாம்பட்டி, அச்சல்வாடி, எல்லப் புடையாம்பட்டி மற்றும் செல்லம்பட்டி ஆகிய 15 கிராமங்கள் பயன்பெறும். இது குறித்து ஆட்சியர் கூறுகையில், விவசாயி நீர்வள ஆதாரத்துறை அலுவலர்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி வரட்டாறு அணையிலிருந்து தற்போது உள்ள நீரின் அளவை கொண்டு சாகுபடி செய்து அதிக விளைச்சல் பெறுமாறு கேட்டுக் கொண்டார். வருகின்ற 27/4/2025 வரை பாசனத்திற்காக நீர் திறந்து விடப்படும். தொடர்ந்து கீரைப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆட்சியர் சதீஷ் ஆய்வு மேற்கொண்டார். அப்போது புறநோயாளிகளாக சிகிச்சை பெற வந்தவர்களிடமும் அவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்தும் ஆட்சியர் கேட்டறிந்தார். மேலும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு சிகிச்சை பெற வரும் நோயாளிகளுக்கு தேவையான அளவு மருந்து மாத்திரைகளை இருப்பில் வைத்துக்கொள்ள வேண்டும் என டாக்டர்கள் மற்றும் செவிலியர்களுக்கு ஆட்சியர் அறிவுறுத்தினார்.



