மார்த்தாண்டம், ஜன. 27 –
கருங்கல் அருகே பெருமாங்குழி பகுதியை சேர்ந்தவர் வல்சலம். இவருக்கு அதே பகுதியில் சொந்தமான வாழைத்தோட்டம் உள்ளது. இங்கு அறுவடை பருவத்தில் நின்ற மூன்று செவ்வாழை குலைகளை இரவு நேரத்தில் யாருக்கும் தெரியாமல் அங்கு வந்த மர்மம் நபர்கள் திருடி சென்றுள்ளனர். இந்த நிலையில் இன்று காலை தோட்டத்திற்கு சென்று பார்த்த வம்சலம் வாழை குலைகள் மாயமானதை கண்டார்.
இதுபோன்று பெருமாங்குழி பகுதியை சேர்ந்தவர் ஜஸ்டஸ் பின்சிலின். இவருக்கு சொந்தமான வாழை தோட்டத்தில் இருந்த மரங்களில் இருந்து 9 செவ்வாழை குலைகளை திருடிச் சென்றுள்ளனர். மேலும் கருங்கல் காத்த விளை பகுதி சிரில் ராஜ் (45) என்பவருடைய தோட்டத்தில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு 9 செவ்வாழை குலைகளை இரவு நேரத்தில் மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர்.
இந்த திருட்டு சம்பவங்கள் தொடர்பாக கருங்கல் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தொடரும் வாழைக்குலைகள் திருட்டால் அப்பகுதி விவசாயிகள் கலக்கமடைந்துள்ளனர்.


