நாகர்கோவில் ஜூன் 17
கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு நிதி உதவிபெறும் பள்ளிகளில் தமிழ்வழிக் கல்வி பயின்ற மாணவிகள் புதுமைப்பெண் திட்டத்தில் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் அறிவித்துள்ளார். கடந்த 2022-ஆம் ஆண்டு முதல் மூவலூா் ராமாமிா்தம் அம்மையாா் திருமண உதவித்திட்டம் மாற்றியமைக்கப்பட்டு மூவலூா் ராமாமிா்தம் அம்மையாா் உயா்கல்வி உறுதித்திட்டமான புதுமைப்பெண் திட்டமாக செயல்படுத்தப்படுகிறது.
தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை படித்து, தமிழகத்திலேயே உயா்கல்வியைத் தொடரும் மாணவிகளுக்கு இத் திட்டத்தில் மாதம் ரூ.1000 உதவித் தொகை வழங்கப்படும்.புதிய அரசாணையின்படி 2024-25 ஆம் கல்வி ஆண்டு முதல், தமிழகத்தில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழிக் கல்வி பயின்று மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளும் இந்த திட்டத்தில் பயன்பெறும் வகையில் இத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
கடந்த கல்வி ஆண்டில் கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் இருந்து மொத்தம் 8,024 மாணவிகள் பிளஸ் 2 தோ்வு எழுதினா். அதில் 7,736 மாணவிகள் தோ்ச்சி பெற்றனா். எனவே, மேற்படிப்பில் சேரும் எல்லா மாணவிகளும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் அல்லது தபால் அலுவலகங்களில் புதிய கணக்கு தொடங்கி இந்த திட்டத்தில் பயனடையலாம். மாணவிகள் தங்களுடைய ஆதாா் எண்ணில் பயோமெட்ரிக் புதுப்பித்து இத்திட்டத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
கல்லூரிகளின் முதல்வா்கள், திட்ட ஒருங்கிணைப்பு அலுவலா்கள் மற்றும் கன்னியாகுமரி மாவட்ட சமூகநல விரிவாக்க அலுவலா்கள், மகளிா் ஊா்நல அலுவலா்கள் அனைவரும், புதுமைப்பெண் திட்டம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும். தகுதியுள்ள மாணவிகள் இந்த திட்டத்தில் பயனடைவதை உறுதி செய்ய வேண்டும் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.