சென்னை, ஏப்ரல் 21
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் தொடங்கப்பட்ட நந்தனம் அரசு கலைக்கல்லூரியில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின் கீழ், அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.4.80 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள ‘கலைஞர் கலையரங்கம்’ இன்று சிறப்பாக திறந்து வைக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு கலையரங்கத்தை திறந்து வைத்தார். 1986-ம் ஆண்டு இந்த கல்லூரியில் மாணவர் பேரவையை தொடங்கிய கலைஞர் அவர்கள், இந்தித்திணிப்புக்கு எதிராக ஆற்றிய சக்திவாய்ந்த உரையை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் சுட்டிக்காட்டி, அதன் சமகாலப் பொருத்தத்தையும் விவரித்தார்.
புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன், நான் முதல்வன் போன்ற கல்விக்கான முன்னோடி திட்டங்கள், அரசின் கல்விப் புரட்சியை முன்னெடுத்துச் செல்வதில் மையப்புள்ளியாக உள்ளன என்றும், இந்த திட்டங்கள் மாணவர்களின் எதிர்காலத்தை மாற்றும் வகையில் பயன்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மாணவர்கள் இந்த வாய்ப்புகளை முறையாக பயன்படுத்தி உயரிய நிலைகளை அடைய வாழ்த்தி, நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரையும் உற்சாகத்துடன் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்தினார்.