நாகர்கோவில், நவம்பர் 24 –
நாகர்கோவில் வடசேரி கிருஷ்ணன் கோவில் தெப்பக்குளம் புதுத் தெருவை சேர்ந்தவர் சிவலிங்கம் (42). கார் டிரைவர். சம்பவத்தன்று இரவு 10 மணியளவில் இவர் வேலை முடிந்து புது குடியிருப்பு சுப்பையார்குளம் அருகே நடந்து வந்து கொண்டிருந்தாராம். அப்போது வாலிபர் ஒருவர் சிவலிங்கத்தை வழிமறித்து பணம் கேட்டு மிரட்டி உள்ளார்.
சிவலிங்கம் பணம் இல்லை என்றதும் அவரை கீழே தள்ளி காலால் மிதித்து, கத்தியை காட்டி மிரட்டி அவரின் சட்டை பையில் இருந்த ரூ.850 பணத்தை பறித்தார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்ததால் அந்த வாலிபர் நடந்ததை வெளியே கூறினால் கொன்று விடுவேன் என கத்தியை காட்டி மிரட்டி விட்டு தப்பினார். இது குறித்து சிவலிங்கம் வடசேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் போலீசார் நடத்திய விசாரணையில் கீழப்புத்தேரி கணேஷ் நகரை சேர்ந்த பாலமுருகன் என்ற பாலா (28) என்பவர் பணம் பறித்தது தெரியவந்துள்ளது. இதை அடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். கைதான பாலா மீது ஏற்கனவே வடசேரி, கோட்டார் காவல் நிலையங்களில் வழக்குகள் உள்ளன. இவர் அவ்வப்போது வழிப்பறியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக எஸ்.ஐ. குத்தாலிங்கம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்.


