மார்த்தாண்டம், ஜூன் 8 –
களியல் அருகே கோதையாற்றில் உள்ள உறை கிணற்றின் மேல் பகுதியில் கடந்த 5 மாதங்களுக்கு முன் முதலை ஒன்று கிடந்ததை பொது மக்கள் பார்த்தனர். கடையால் பகுதியை அடுத்த தோட்டாவாரம் பகுதிக்கும் செங்குழி என்னும் பகுதிக்கும் இடையே பாயும் கோதையாற்றில் பயனற்ற நிலையில் காணப்படும் குடிநீர் உறிஞ்சு கிணற்றின் மேல் பகுதியில் கிடக்கும் முதலையை முதலில் அப்பகுதியை சார்ந்த பால்வெட்டு தொழிலாளி பார்த்துள்ளார்.
இதை தொடர்ந்து அப்பகுதியை சார்ந்த பலரும் பார்த்து வீடியோ வெளியிட்டனர். மக்கள் அதிகமாக பயன்படுத்தும் ஆற்றில் முதலை கிடப்பது உறுதி ஆனது. இதைத் தொடர்ந்து மக்களிடையே பரபரப்பு ஏற்பட்டது.
உடனடியாக சம்பவ இடத்திற்கு மக்கள் பிரதிநிதிகள் வந்து பார்வையிட்டு களியல் வனத்துறை அதிகாரிகளை வரவழைத்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியதின் பேரில், மாவட்ட வனத்துறை அதிகாரி நேரில் ஆய்வு செய்து முதலையை பிடிக்க பல்வேறு நடவடிக்கைள் எடுத்தனர். தொடர்ந்து பிப்ரவரி மாதம் முதலையை பிடிக்க கூண்டு அமைத்து அதே பகுதியில் வனத்துறையினரும் கொட்டகையும் அமைத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு அப்பகுதியில் பொதுமக்கள் செல்ல தடையும் விதித்தனர்.
தொடர்ந்து பல நாட்கள் கழிந்தும் கூண்டில் முதலை சிக்காததாலும், வனத்துறையினரின் கண்ணில் சிக்காதாலும் கண்காணிப்பு பணியை நிறுத்தி விட்டு கூண்டையும் அப்படியே விட்டு சென்றனர். இந்த நிலையில் நான்கு மாதங்களுக்கு பிறகு அதே பகுதியில் கூண்டின் அருகாமையில் உள்ள கிணற்றின் மீது மீண்டும் இன்று முதலை தென்பட்டுள்ளது. இதை பார்த்த அப்பகுதி மக்கள் அதை போட்டாவாகவும் எடுத்து பதிவிட்டுள்ளனர். இந்த சம்பவம் இந்த பகுதியில் மீண்டும் பரப்பை ஏற்படுத்தியுள்ளது.



