நாகர்கோவில், மே 13 –
நாகர்கோவில் மாநகராட்சி 28வது வார்டுக்குட்பட்ட கோட்டார் ஸ்ரீ சக்தி விநாயகர் கோவில் அருகிலுள்ள குறுந்தெரு மாநகராட்சி பூங்கா மற்றும் கழிவுநீர் ஓடை ஆகியவற்றை நாகர்கோவில் மாநகராட்சி (பொறுப்பு) மேயர் மேரி பிரின்ஸி லதா அதிகாரிகளுடன் இணைந்து ஆய்வு மேற்கொண்டார்.
நாகர்கோவில் மாநகராட்சி மேயர் இன்று காலை திடீரென கோட்டார் பகுதியில் உள்ள 28 வது வார்டுக்கு உட்பட்ட குறுந்தெரும் பூங்கா மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார்.
அப்போது பூங்காவில் பொதுமக்கள் பயன்படுத்தி வந்த விளையாட்டு உபகரணங்கள் மற்றும் நடைபாதை தளங்கள் உடைந்த நிலையில் இருப்பதைக் கண்டு உடனடியாக அவைகளை சீரமைக்கவும், பழுதாகி காணப்படும் மின் கம்பங்களை சீரமைக்கவும், திறந்த நிலையில் காணப்பட்ட மின் கம்ப சுவிட்ச் போர்டு போன்றவற்றை முறைப்படி மூடி பொதுமக்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த உத்தரவிட்டார்.
அதனைத் தொடர்ந்து பூங்காவின் பின்புறம் ஓடும் கழிவுநீர் ஓடையை பார்வையிட்ட அவர் ஓடையில் தண்ணீர் தேங்கி நிற்பதால் கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதார சீர்கேட்டை விளைவிக்கும் என்பதால் தேங்கி நிற்கும் கழிவு நீரை முறைப்படி சுத்தம் செய்து கழிவுநீர் தங்கு தடை இன்றி செல்ல வழிவகை செய்யவும் பூட்டி வைக்கப்பட்டுள்ள கழிப்பிட கட்டிடத்தை சுத்தம் செய்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை மேற்கொண்டார்.
மேலும் பூங்காவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக குப்பைத்தொட்டி வைக்கவும், தினந்தோறும் பூங்காவை சுத்தம் செய்து சுகாதாரமாக வைத்திருக்கவும், தடையின்றி குடிநீர் கிடைக்க வழிவகை செய்யவும் அதிகாரிகளை கேட்டுக்கொண்டார்.
இந்த ஆய்வில் சுகாதார ஆய்வாளர் ஸ்டாலின் குமார், மாமன்ற உறுப்பினர் அனந்தலட்சுமி, வட்ட செயலாளர் முத்துகிருஷ்ணன், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் பெஞ்சமின், வட்ட பிரதிநிதி செல்வம் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.



