நாகர்கோவில், அக். 14 –
நாகர்கோவில் மாநகர பகுதிகளில் சாலையோரம் உள்ள மழைநீர் வடிகால்களில் கழிவுமண் அடைந்து காணப்படுகிறது. தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் முன் அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய அனைத்து மாவட்டங்களுக்கும் அரசு அறிவுறுத்தி இருந்தது. இந்நிலையில் மழைநீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடி சாலைகள் சேதமடைவதை தவிர்க்க நகர்ப்புறங்களில் வடிகால் வசதிகளை மேம்படுத்த வேண்டும்.
மழைநீர் வடிகாலில் உள்ள குப்பைகள், கழிவு மண்களை அகற்றி மழைநீர் வடிந்து செல்லும் வகையில் வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது. அந்த வகையில் நாகர்கோவில் மாநகராட்சி வெட்டூர்ணிமடம் எம்.எஸ் சாலையில் மழைநீர் வடிகால் ஓடையில் நிரம்பி இருந்த கழிவுமண்களை அகற்றும் பணி கடந்த வாரம் தொடங்கியது. ஆனால் அந்த பணி சரிவர செய்யாமல் ஆங்காங்கே கழிவுமண் அடைந்து மழைநீர் செல்ல முடியாத வகையில் பணிகள் நடந்துள்ளது. இந்த பணியை சரிவர செய்யாத ஊழியர்கள் மற்றும் அதை ஆய்வு செய்யாத அதிகாரிகள் மீது ஆணையர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி சாலை, பால்பண்ணை சாலை, செட்டிகுளம், கோட்டார், கலெக்டர் அலுவலக சாலைகள் மற்றும் மாநகரின் அனைத்து சாலைகளிலும் மழைநீர் வடிகால்கள் கழிவுமண் நிரம்பி அடைந்து காணப்படுகிறது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடி வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்படுவது மட்டுமின்றி சாலைகள் சேதமடைகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகின்றனர். மாநகராட்சி ஆணையர் மழைநீர் வடிகால் ஓடையை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்



