தஞ்சாவூர், செப்டம்பர் 6 –
அதிமுக ஒன்றாக இணைய வேண்டும் என்கிற செங்கோட்டையன் கருத்தை வரவேற்கிறேன் என்றார் அதிமுக முன்னாள் அமைச்சரும் தற்போது ஒரத்தநாடு தொகுதி எம்எல்ஏயும் அதிமுக தொண்டர் உரிமை மீட்பு குழு சேர்ந்தவருமான ஆர். வைத்திலிங்கம்.
தஞ்சாவூரில் திருமண விழாவில் கலந்து கொண்ட அவர் பின்னர் செய்தியாளர்களின் தெரிவித்ததாவது: அதிமுக ஒன்றாக இணைய வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் செங்கோட்டையன் சொன்னதை மனப்பூர்வமாக வரவேற்கிறேன்.
எங்களிடம் அவர் தொடர்பில் இல்லை. அவர் தற்போது எடப்பாடி தலைமையிலான அதிமுகவில் இருக்கிறார். அவருக்கு அங்கு ஆதரவு அதிகமாக இருக்கிறது. அவருடைய கருத்தை அனைத்து தொண்டர்களும் விரும்புகின்றனர் எல்லோரும் வரவேற்கின்றனர் அவர் 10 நாட்கள் வரை கெடு விதித்துள்ளார். அதன் பிறகு எனது கருத்தை தெரிவிக்கிறேன்.
அதிமுக மீது அனைத்து தரப்பு மக்களும் பாசம் வைத்துள்ளனர். அதிமுகவினர் ஒன்றிணைய தடையாக இருப்பவர் மீது மக்கள் கோபமாக இருக்கின்றனர். இன்றைய சூழ்நிலையில் அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்பதில் ஓ .பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் உள்பட அனைவரும் ஒத்த கருத்துடன் இருப்பர் என நம்புகிறேன். அதிமுகவை ஒருங்கிணைக்கும் பணிக்கு செங்கோட்டையன் அழைத்தால் நாங்களும் செல்வோம் என்றார் வைத்திலிங்கம்.



