தருமபுரி, ஜூலை 22 –
தருமபுரி மாவட்ட தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மாநில தலைவர் எஸ்.ஏ.சின்னசாமி தலைமையில் தமிழ்நாடு அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு அரசு கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கியுள்ள அனைத்து பயிர் கடன்களையும் முழுவதுமாக தள்ளுபடி செய்ய வேண்டும். தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடன்களில் 50% தள்ளுபடி செய்ய வேண்டும். வேளாண்மைக்கு தேவையான இடுபொருட்களான விதை, உரம், பூச்சிக்கொல்லி போன்றவற்றிற்கு 50% மானியம் வழங்க வேண்டும். கூட்டுறவு பயிர்கடன் தள்ளுபடியில் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளும் உள்ளடக்க வேண்டும். தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றி விவசாயிகளின் பயிர்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும்.
கூட்டுறவு வங்கிகள் விவசாயிகளுக்கு பயிர்க்கடன் வழங்குவதில் நெருக்கடி கொடுப்பதை கைவிட வேண்டும். நெல் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வேண்டும். விவசாயிகள் விளைவித்த நெல்லை உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டும். மேகதாதுவில் அணை கட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மத்திய, மாநில அரசை கண்டித்து விவசாயிகள் முழக்கங்களை எழுப்பினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் சக்திவேல், மாவட்ட செயலாளர் குப்புசாமி, மாவட்ட பொருளாளர் பழனி, மாவட்ட துணைத் தலைவர் அண்ணாமலை, மாவட்ட துணை செயலாளர்கள் நடராஜ் ,சுப்பிரமணி, சிவலிங்கம் மற்றும் லோகநாதன், வெங்கடேசன், காமராஜ், குமார், ராஜா, நல்ல தம்பி ஆகியோர் கலந்து கொண்டனர்.



