தொண்டி போலீசில் மமக மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் ஜிப்ரி புகார்!!
ராமநாதபுரம், நவ.10-
மக்களிடையே அவதூறு கருத்துக்களை பரப்பி சமூகங்களுக்கு இடையே மோதல் போக்கை ஏற்படுத்தும் பாரதிய ஜனதா கட்சி நிர்வாகி எச் ராஜா மீது நடவடிக்கை எடுக்க கோரி ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட மனிதநேய மக்கள் கட்சி மாவட்டச் செயலாளர் முகம்மது ஜிப்ரி தொண்டி காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் புகார் மனுவில் கூறியிருப்பதாவது:
நீதி, மதச்சார்பற்ற தன்மை, ஒற்றுமை என்பது நம் சமூகத்தில அடிப்படை மதிப்புகளாக உள்ளன. ஆனால் கடந்த சில தினங்களாக பாரதீய ஜனதா கட்சியின் தமிழ்நாடு ஒருங்கிணைப்பாளராக இருந்து வரும் ஹெச்.ராஜா ஊடகங்களிலும், பத்திரிக்கையாளர் சந்திப்பிலும் தரம் தாழ்ந்த முறையில் சமூக அமைதியை குலைக்கும் வகையில் தவறான, குரோதமான தகவல்களை பரப்பி, சிறுபான்மை சமூகங்களின் தலைவர்கள் மற்றும் அதன் மக்களின் மீது ஏற்றுக்கொள்ள முடியாத பல்வேறு பொய்யான குற்றச்சாட்டுகளை மதப்பகைமையைத் தூண்டும் வகையில் பரப்பிகொண்டு வருகிறார்.
குறிப்பாக, கடந்த நவம்பர் 7 ம் தேதி அன்று சென்னை விமான நிலையத்தில் நடைப்பெற்ற ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் தமிழகத்தின் முக்கிய அரசியல் தலைவர்களில் ஒருவரும், பாபநாசம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும், மனிதநேய மக்கள் கட்சியின் தலைவருமான பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா அவர்களை,
“ஜவாஹிருல்லா பச்சை தேசத் துரோகி, ஜவாஹிருல்லா மட்டும் அல்ல திருமாவளவன் எல்லாத்தையும் சேர்த்தே சொல்கிறேன். ஏன் என்று சொன்னால் தீவிரவாதத்திற்காக இராணுவத்தினரால் கொல்லப்பட்ட புர்கான் வானிக்கு இங்கே சென்னையில் அஞ்சலி கூட்டம் நடத்தியவர்கள் தான் ஜவாஹிருல்லாவும் திருமாவளவனும். .. இந்த மாதிரி தேச விரோதிகள் அந்நிய நாட்டின் கைகூலிகள் நாட்டை காட்டிக்கொடுக்க மாட்டார்கள் என்று எப்படி சொல்கிறீர்கள்.
ஜவாஹிருல்லாவை..தேசவிரோத சக்திகள் இந்த படத்தை எதிர்க்கின்றேன் என்று நீங்கள் தேச விரோதத்தை பரப்புவதாக இருந்தால் தேச பக்தர்கள் நாட்டை நேசிப்பவர்கள் இந்த தீயசக்திகளுக்கு எதிராக களத்தில் இருக்க வேண்டும்..” என
பதற்றத்தை உருவாக்கும் நோக்கில்
தரம் தாழ்ந்த வகையில் விமர்சனம் செய்துள்ளார்.
தீவிரவாதத்திற்காக காஷ்மீரில் இராணுவத்தினரால் கொல்லப்பட்ட புர்ஹான் வானி எனபவருக்காக சென்னையில் பேராசிரியர் ஜவாஹிருல்லாவும் முனைவர் திருமாவளவனும் அஞ்சலி கூட்டம் நடத்தினார் எனவும் பொய்யான செய்திகளை பரப்பி, மத துவேஷத்தை தூண்டி சமூகங்களின் இடையில் மதக்கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கில் பேசியுள்ளார்.
மேலும், “இந்த படத்தை எதிர்க்கின்றேன் என்று நீங்கள் தேச விரோதத்தை பரப்புவதாக இருந்தால் தேச பக்தர்கள் நாட்டை நேசிப்பவர்கள் இந்த தீயசக்திகளுக்கு எதிராக களத்தில் இருக்க வேண்டும்” என எச்சரிப்பதாக மிரட்டும் தொனியில் கூறி திட்டமிட்டு மதக்கலவரத்தை தூண்ட முயற்சி செய்திருக்கிறார். இவர் தொடர்ந்து இது மாதிரியான பல்வேறு மத துவேஷ கருத்துக்களை மக்களின் மத்தியில் பரப்பியும், சமுதாய தலைவர்களை தரம் தாழ்ந்து வசைப்பாடி வருவதும் தொடர் கதையாக நிகழ்ந்து வருகிறது.
கடந்த 2021 ஆம் ஆண்டு கூட ஹெச்.ராஜா நடிகர் சிவகார்த்திக்கேயனின் தந்தை இறப்பிற்கு பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா தான் காரணம் என பொய்யான குற்றச்சாட்டினை பரப்பி சமூகத்தில் பதற்ற நிலையை உண்டாக்கினார். பின்னர், தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் புகார்கள் எழுந்த நிலையில், தான் தவறாக சொல்லவிட்டேன் என கூறி செய்த தவற்றிலிருந்து தப்பித்துக்கொள்ள முயற்சி செய்தார் என்பதும் குறிப்பிடதக்கது.
மேலே, குறிப்பிடப்பட்டுள்ள அனைத்தும் கருத்துகளும் பல்வேறு செய்தி தொலைக்காட்சிகள், சமூக வளைத்தளங்கள் என பரவி சமூகத்தில் மோதல் போக்கினை உண்டாக்கும் சூழல் ஏறபட்டிருக்கிறது. இதன் விளைவாக, உண்மையான சமூக ஒற்றுமைக்கு பாதிப்பு ஏற்படுகிறது. இந்த வகையான தவறான தகவல் பரப்புதல் மற்றும் மத அடிப்படையில் எதிர்பாராத வெறுப்பை உண்டாக்கும் செயற்பாடுகள் எந்த சமூகத்தில் இருந்தாலும், அது நம் சமூகத்தின் ஒற்றுமைக்கும், மத நல்லிணக்கத்திற்கும் தீங்கு விளைவிக்கும் குற்றச்செயலாகும்.
எனவே, நான் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா மீது, தவறான தகவல் பரப்பும், சமூக விரோத கருத்துக்களை ஊக்குவிக்கும், மக்களால் தேரந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் எம் எச் ஜவாஹிருல்லா மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் தொல். திருமாவளவன் மீது தேவையற்ற அவதூறு பரப்ப செய்து, மக்களுக்கு இடையில் மோசமான தாக்கங்களை ஏற்படுத்தும் வகையில் செயல்படுகிறார் எனும் குற்றச்சாட்டுகளின் கீழ், தகுந்த வழக்கு பதிவு செய்ய உங்களிடம் வேண்டுகோள் விடுக்கின்றேன். அவரது பேட்டியின் காணொலியை இத்துடன் பென் டிரைவில் இணைத்துள்ளேன். இதை ஆவணப்படுத்தி, விரைவில் ஆராய்ந்துகொண்டு, சட்டப்படி தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு புகார் மனுவில் கூறியுள்ளார்.
மமக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.