நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் சிவகாமி எஸ்டேட் குழுமம் மற்றும் பைஸ் ஜிம் தலைமையில் 2024 ஆம் ஆண்டிற்கான மிஸ்டர் கொங்கு நாடு ஆணழகன் போட்டி நடைபெற்றது.
இதனை சிவகாமி எஸ்டேட் நிர்வாக இயக்குனர் பி. சிவகுமார் மற்றும் ஹரீஷ் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து 19 வயதுக்கு உட்பட்டவர்களில் இருந்து, 50 முதல் 75 கிலோ வரையிலான உடல் எடை கொண்டவர்கள் மற்றும் 40 வயதிற்கு மேற்பட்டவர்கள் என பல்வேறு பிரிவுகளின் கீழ் போட்டிகள் நடைபெற்றன.
இந்நிகழ்ச்சியில் தமிழ் கட்டுடல் சங்கத்தினுடைய நிர்வாகிகள் நடுவர்களாக பணியாற்றி சிறந்த கட்டுடல் கொண்ட ஆணழகன் போட்டியாளர்களை தேர்வு செய்தனர்.
இந்த போட்டியில் நீலகிரி கோவை, திருப்பூர் ஆகிய மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ஆர்வமுடன் தங்கள் திறமைகளை பார்வையாளர்கள் முன்பு வெளிப்படுத்தினர். இதில் ஒவ்வொரு போட்டியிலும் முதல் ஐந்து இடங்களை பிடித்த இளைஞர்களுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்ட நிலையில் சிறந்த கட்டுடல் கொண்ட கொங்கு நாடு ஆணழகனுக்கான பட்டத்தை கோவையைச் சேர்ந்த பிரசாந்த் என்பவர் வென்றார்.
சிவகாமி எஸ்டேட் நிர்வாக இயக்குனர் போட்டியில் வெற்றி பெற்ற இளைஞர்களுக்கு பரிசு கோப்பைகள் மற்றும் பரிசு பொருட்களை வழங்கி கௌரவித்தார். இதனை உள்ளூர் மக்கள் மற்றும் ஏராளமான சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.