தென்காசி, ஆகஸ்ட் 6 –
தமிழகம் முழுவதும் மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற நோக்கத்தோடு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அஇஅதிமுக பொதுச்செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தென்காசி மாவட்டம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டார். தென்காசி மாவட்டம் தென்காசி வேன் ஸ்டாண்ட் அருகில் எழுச்சி உரையாற்றினார். அஇஅதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பேசியதாவது: 2021-ம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்தவுடன் தென்காசி மாவட்டத்தில் செயல்படுத்தப்படுவதாக சொன்ன 10 திட்டங்களில் ஒன்று கூட நான்காண்டு ஆட்சிகள் முடிந்த நிலையில் செயல்படுத்தவில்லை. அதனால் இது திராவிட மாடல் ஆட்சி அல்ல. 10 க்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் பூஜ்ஜியம் மாடல் அரசு.
2011-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி அதிமுக ஆட்சியில் வழங்கியதை 2021-ம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்த பிறகு இன்றுவரை மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கப்படவில்லை. அந்தத் திட்டத்தை 2026-ம் ஆண்டு அஇஅதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் மீண்டும் மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கப்படும். பொங்கல் பரிசாக மக்களுக்கு 2500 ரூபாய் வழங்கப்படும். தீபாவளி பரிசாக தாய்மார்களுக்கு இலவச சேலை வழங்கப்படும். மேலும் அஇஅதிமுக ஆட்சியில் கொண்டு வந்த பல திட்டங்களை திமுக ஆட்சி தடை செய்துள்ளது. அது மீண்டும் செயல்படுத்தப்படும்.
தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்டி முடித்து மூன்று ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் இன்றும் திறக்கப்படவில்லை. அஇஅதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உடனடியாக திறக்கப்படும் என்று கூறினார். பின்னர் தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் செல்வமோகன்தாஸ் பாண்டியன் அஇஅதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு மாலை அணிவித்து வெள்ளியினால் செய்யப்பட்ட தென்காசி ராஜகோபுரத்தினை பரிசாக வழங்கினார்.
தொடர்ச்சியாக தென்காசி காசி விஸ்வநாதர் ஆலயத்தின் முன்பு அஇஅதிமுக மகளிர் அணியின் சார்பாக வழங்கப்பட்ட கும்பம் மரியாதையை ஏற்றுக்கொண்டார். அதன் பின்னர் அம்பாசமுத்திரம் மற்றும் ஆலங்குலம் தொகுதியில் எடப்பாடி பழனிசாமி எழுச்சி உரையாற்றினார். நிகழ்ச்சியில் அஇஅதிமுக தென்காசி தெற்கு மற்றும் வடக்கு மாவட்டத்தை சார்ந்த முக்கிய நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கூட்டணி கட்சியை சார்ந்த முக்கிய நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.



