மதுரை மாவட்டத்தில் தீபாவளிப் பண்டிகை நாடு முழுவதும்
கொண்டாடப்பட்டது. இதையொட்டி, மதுரை, சிவகங்கை, விருதுநகர் உள்ளிட்ட தென் மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்கள் புத்தாடைகள், அத்தியாவசியப் பொருள்கள் வாங்குவதற்காக மதுரைக்கு வந்தனர். குறிப்பாக, மதுரை நான்கு மாசி வீதிகள், சித்திரை வீதிகள், ஆவணி மூல வீதிகள், கீழவாசல், விளக்குத்தூண் உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் மக்கள் கூட்டம் அலைமோதியது. இதுதவிர, தீபாவளி தினத்தன்று தெருக்களில் பட்டாசுகள் வெடிக்கப்பட்டன. அன்றைய தினம் பட்டாசுகள் வெடிக்க நேரக் கட்டுப்பாடுகளை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த உத்தரவை மீறுபவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்படும் என்றும் தமிழக அரசு எச்சரிக்கை விடுத்தது. இந்த நிலையில், மதுரை மாநகரப் பகுதியில் அரசு அறிவித்த நேரக் கட்டுப்பாடுகளை மீறி பட்டாசுகள் வெடித்ததாகவும், பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் பட்டாசுகள் வெடித்ததாக 5 வழக்குகளும், ஊரகப் பகுதிகளில் பட்டாசுகள் வெடித்ததாக 13 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன. இதன்படி, மதுரை மாவட்டத்தில் 18 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. மேலும் தீபாவளி திருநாள் காரணமாக, மதுரை மாநகராட்சிப் பகுதிகளில் வழக்கத்துக்கு அதிகமாக குப்பைகள் தரங்கின. இதை அகற்றும் பணியில் மதுரை மாநகராட்சி சார்பில் 428 இலகுரக வாகனங்கள், 15 டம்பர் பிளேசர்கள், 15 காம்பேக்டர்கள், 3 டிப்பர் லாரிகள். 2 பொக்லைன் இயந்திரங்கள், 15 டிராக்டர்கள் என மொத்தம் 478 வாகனங்கள் பயன்படுத்தப்பட்டன. தவிர, 4, 051 தூய்மைப் பணியாளர்கள் துப்புரவுப் பணிகளில் ஈடுபட்டனர். இந்த நிலையில், மதுரை மாநகராட்சிப் பகுதிகளில் கடந்த 30-ஆம் தேதி 994 டன் குப்பைகளும், 31-ஆம் தேதி 326 டன் குப்பைகளும், வெள்ளிக்கிழமை மாலை 6 மணி வரை 370 டன் குப்பைகளும் என 3 நாள்களில் மட்டும் 1, 690 டன் குப்பைகள் அகற்றப்பட்டன.
இந்தக் குப்பைகள் அனைத்தும் வாகனங்கள் மூலம் வெள்ளைக்கல்லில் உள்ள உரம் தயாரிப்பு நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன என மதுரை மாநகராட்சித் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.