மதுரை, ஆகஸ்ட் 6 –
மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் ரூபாய் 5 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள நாற்றங்கால் பண்ணையில் நடவு செய்து வளர்க்கப்பட்டு வரும் செடிகளின் ரகங்கள் மற்றும் செடிகளின் விற்பனை குறித்து மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் கே.ஜே. பிரவீன் குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும் இப்பண்ணையில் தேக்கு, நாவல், நெல்லி, புளி, மலைவேம்பு, இலுப்பை,
மகாகனி, வேங்கை உள்ளிட்ட 11 ஆயிரம் மரக்கன்றுகளை மண் மற்றும் இயற்கை எருவுடன் பாலிதீன் கவர்களில் நிரப்பி அவற்றை தினமும் ஏராளமான பெண்கள் பராமரிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் மூலம் கொட்டாம்பட்டி ஒன்றியத்தில் உள்ள 27 ஊராட்சிகளுக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டு அக்கிராமங்களில் குறுங்காடுகளை ஏற்படுத்துதல், சாலையோரங்களில் மரக்கன்றுகள் நடுதல் உள்பட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த ஆய்வின் போது வேளாண்மை துறை சார்ந்த அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.



