கிருஷ்ணகிரி ஏப்ரல் 16
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் ச.தினேஷ்குமார்.இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். 23.11.2023 அன்று வெளியிட்ட செய்தியில் மக்களை நாடி மக்கள் குறைகளை கேட்டு, உடனுக்குடன் தீர்வு காண அரசு இயந்திரம் களத்திற்கே வரும் “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” என்ற புதிய திட்டத்தினை அறிவித்து இத்திட்டத்தின் படி மாவட்ட ஆட்சியர் ஒவ்வொரு மாதமும் மாவட்டத்தில் உள்ள ஏதேனும் ஒரு வட்டத்தில் தங்கியிருந்து அங்கேயே கள ஆய்வில் ஈடுபட்டு அந்த வட்டத்தில் உள்ள மக்களின் குறைகளை கேட்டறிந்து அவர்களுக்கு அரசின் அனைத்து நலத்திட்டங்களும் சேவைகளும் தங்கு தடையின்றி சென்று அடைவதை உறுதி செய்ய வேண்டுமென அறிவுறுத்தியுள்ளார்.
அதனடிப்படையில், ஒவ்வொரு மாதமும் மூன்றாவது புதன்கிழமை அன்று மாவட்டத்தில் உள்ள ஏதேனும் ஒரு வட்டத்தில் காலை 9.00 மணி முதல் அடுத்த நாள் காலை 9.00 மணி வரை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட அளவிலான பல்வேறு துறை அலுவலர்கள் அங்கேயே தங்கியிருந்து கள ஆய்வில் ஈடுபட்டு அந்த வட்டத்தில் உள்ள மக்களின் குறைகளை கேட்டறிந்து அவர்களுக்கு அரசின் அனைத்து நலத்திட்டங்களும், சேவைகளும் தங்கு தடையின்றி சென்று அடைவதை உறுதி செய்யும் பொருட்டு ஏப்ரல் மாதம் இன்று காலை 9.00 மணி முதல் நாளை 17.04.2025 காலை 9.00 மணி வரை பர்கூர் வட்டத்தில் உள்ள கிராமங்களில் “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டம் நடைபெற உள்ளது.
இம்முகாமில் பர்கூர் வட்டத்தில் உள்ள அனைத்து வருவாய் கிராமங்களில் அனைத்து துறை அலுவலர்களும் கள ஆய்வு செய்கின்றனர். அந்த வகையில் இன்று பிற்பகல் 2.30 மணியளவில் பர்கூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் கள ஆய்வு அலுவலர்களின் ஆய்வு கூட்டமும், மாலை 4.00 மணியளவில் பர்கூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் பொதுமக்களுடன் கலந்தாய்வு செய்தும் கோரிக்கை மனுக்களும் பெறப்படும். இக்கூட்டத்தில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடையலாம் எனத் தெரிவித்துள்ளார்.



