நாகர்கோவில் ஏப் 10
இலக்கிய செல்வர் குமரி அனந்தன் மறைவுக்கு குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி :-
அரசியலிலும், இலக்கியத்திலும் செல்வராக திகழ்ந்த காங்கிரஸ் பேரியக்கத்தின் மூத்த தலைவரும், தமிழுக்கும் தமிழ் இனத்திற்கும் சேவைகள் பல செய்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் எனது பெரியப்பாவுமான குமரி அனந்தன் அவர்கள் மறைவு குறித்த செய்தி அறிந்து வேதனையால் வருந்துகிறேன்.
தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும், ஐந்து முறை சட்டமன்ற உறுப்பினராகவும், கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினராகவும், மிக நேர்மையுடன் பணியாற்றியவர். பாதயாத்திரைகள் மேற்கொண்டவர்
சொல் பேச்சில் மட்டும் கடமையை செய்யாமல் தான் உறுதி கொண்ட கொள்கைகளுக்காக களத்தில் நின்று போராடியவர் ஐயா குமரி அனந்தன் அவர்கள். பாதயாத்திரை பல மேற்கொண்டு தனது இலட்சியத்தை மக்கள் மத்தியில் எடுத்து சென்று வெற்றி கண்டவர் அவர்.
அவர் எழுதிய புத்தகங்கள் அவரது தமிழ் புலமைக்கு எடுத்துகாட்டு. அவரது எழுத்திலும் பேச்சிலும் வழியும் அழகு அவருக்கு தமிழ் அன்னை கொடுத்த வரம்.
பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் உண்மை தொண்டனாக உழைத்து, எனக்கும் எனது தந்தைக்கும் அரசியல் வழிகாட்டியாக திகழ்ந்து, காங்கிரஸ் பேரியக்கத்தின் பல தலைவர்களை உருவாக்கிய பெருமை அவரை சேரும்.
இறுதி மூச்சு வரை தமிழ், காங்கிரஸ் என்று வாழ்ந்து மறைந்த அன்னாரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்.