கிருஷ்ணகிரி, ஜனவரி 19 –
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கலப்பு திருமண செய்த தம்பதிகளை ஊரைவிட்டு விரட்டுவதாக கலப்பு திருமண செய்து கொண்ட தம்பதிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ஒன்றியம் காரப்பட்டு அடுத்த வண்ணாம்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த ரவி மகன் லட்சுமணன் என்பவர் இன்று கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியரை சந்தித்து புகார் மனுவை அளித்தார். அதன்பிறகு செய்தியாளர்களிடம் தெரிவித்தது: காரப்பட்டு அடுத்த வலத்தானுர் கிராமத்தை சேர்ந்த கோவிந்தராஜ் மகள் திவ்யா என்ற பெண்ணும் காதலித்து 18.11.2024 அன்று திருமணம் செய்து கொண்டோம். நாங்கள் இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் திருமணம் செய்து கொண்டு வேலைக்காக கேரளாவுக்கு சென்று விட்டோம். எனக்கு 6 மாத ஒரு குழந்தை உள்ள நிலையில் மீண்டும் என்னுடைய சொந்த ஊருக்கு என் மனைவி குழந்தையுடன் வந்துவிடேன்.
இந்நிலையில் என் மனைவியின் சமூகத்தைச் சேர்ந்த ஊர் கவுண்டர் ராஜமாணிக்கம் தூண்டுதலின் பேரில் எனது உறவினர்களான ஆறுமுகம், பரமகேது, வேலு ஆகியோர்
நீங்கள் இங்கே தங்கக்கூடாது வெளியூருக்கு சென்று விடுங்கள் என்று மிரட்டி வருகின்றனர். இதனால் கடந்த ஒரு வருடமாக ஊத்தங்கரை நகரில் வாடகை வீடு எடுத்து வசித்து வருகிறோம். இந்நிலையில் எனது அண்ணியார் இறந்துவிட்டார். அந்த துக்க நிகழ்வுக்கு கூட என்னை வரக்கூடாது எனவும் கொலை மிரட்டல் விடுகின்றனர்.
இதனால் உயிர் பாதுகாப்பு வேண்டியும், என்னுடைய சொந்த வீட்டிற்கு செல்ல தடையாக உள்ள அதே கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம், பரமகேது, வேலு உள்ளிட்ட ஊர் கவுண்டர் ராஜமாணிக்கம் ஆகியோரை அழைத்து விசாரித்து எங்களுக்கு நீதி வழங்க வேண்டும் என்று தெரிவித்தார்.



