கிருஷ்ணகிரி மார்ச்: 26, கிருஷ்ணகிரி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் மற்றும் தேசிய பால்வள மேம்பாட்டு வாரியம் நடத்திய ஆவின் முகவர்கள் விழிப்புணர்வு கூட்டம், புதிய முகவர்களுக்கு விற்பனை விழிப்புணர்வு கூட்டம், மற்றும் ஆவின் பெயர் பலகை வழங்கும் நிகழ்ச்சியை ஆவின் பொதுமேலாளர் சுந்தரவடிவேல் தலைமையில் நடைபெற்றது. இதில் ஆவின் துணை பதிவாளர் விஸ்வேஸ்வரன், விற்பனை மேலாளர் ஐயங்கரன், பால் புரத மேலாளர் சுஜா தரக்கட்டுப்பாடு துணை மேலாளர் கவி பிரியா உள்ளிட்டோர் கலந்துகொண்டு முகவர்களுக்கு ஆவின் பெயர்ப்பலகை வழங்கினார்கள். இந்த கூட்டத்தில் கிருஷ்ணகிரி,போச்சம்பள்ளி,ஊத்தங்கரை,பர்கூர், பேரிகை ஓசூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட ஆவின் முகவர்கள் கலந்து கொண்டு, பால் கெட்டுபோதல், பாக்கெட் பால் கசிவு, தயிர் கெட்டுபோதல் மற்றும் பல்வேறு காரணங்களால் வருவாய் இழப்பு, போன்ற குறைகளை தெரிவித்தனர். இதற்கு பதிலளித்த ஆவின் பொது மேலாளர் டாக்டர் சுந்தர வடிவேல், ஆவின் முகவர்களின் புகார்கள் குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் காலசூழ்நிலை மாற்றத்தால் நடைபெறும் இவ்வாறான குறைகளை, உடனடியாக சரி செய்வதற்கு நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இந்த கூட்டத்தில் பேசிய நுகர்வோர் சங்க மாநில பொது செயலாளர் சந்திரமோகன் பேசுகையில், ஆவின் பொருள்களுக்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளதால், ஆவின் நிர்வாகம் பால், தயிர், மோர்,குளிபானங்கள்,பிஸ்கட், நெய் போன்ற பொருட்களை பொதுமக்களின் தேவைக்கேற்ப விரைவாக கிடைத்திட வழிவகை செய்ய வேண்டும் எனவும், முகவர்களின் நியமான கோரிக்கையான அடையாள அட்டை, லாப சதவீதத்தை உயர்த்தி வழங்கிட வேண்டும், உள்ளிட்ட கோரிக்கைகளை உடனடியாக செய்து தர வலியுறுத்தினார். மேலும் முகவர்கள், உங்களை நாடிவரும் நுகர்வோருக்கு பற்றுச்சீட்டை வழங்க வேண்டுமென கேட்டுக்கொண்டார். இந்த நிகழ்ச்சியின் நிறைவாக முகவர்களுக்கு ஆவின் பெயர் பலகையை வழங்கி, அதை தங்கள் கடைகளில் தவறாமல் வைக்க வேண்டுமென ஆவின் பொது மேலாளர் வேண்டுகோள் விடுத்தார். நிகழ்ச்சி நிறைவில் மேலாளர் சுஜா நன்றி உரையாற்றினார்.



