கேரளா, அக்டோபர் 22 –
குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு 4 நாட்கள் சுற்றுப் பயணமாக நேற்று மாலை கேரளா வந்தார். அதன்பின்னர், சபரிமலை ஐயப்பன் கோயிலில் இன்று குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு சாமி தரிசனம் செய்ய வந்தார். நிலக்கல் ஹெலிகாப்டர் தளத்தில் இறங்க வேண்டிய ஹெலிகாப்டர் மோசமான வானிலை காரணமாக பிரமாடம் என்ற இடத்தில் தற்காலிகமாக தயார் செய்த ஹெலிகாப்டர் தளத்தில் தரை இறக்கம் செய்யப்பட்டது. குடியரசு தலைவர் திரௌபதி முர்மு ஹெலிகாப்டரில் இருந்து வெளியே வந்த பிறகு ஹெலிகாப்டரின் டயர் கான்கீரிட்டில் புதைந்ததால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.
இன்று காலையில் அவசர அவசரமாக கான்கிரீட்டில் தயார் செய்த இறங்கு தளத்தின் கான்கிரீட் மேற்பரப்பு உறுதியாக இல்லை. கான்கிரீட் ஊற்றப்பட்ட 12 மணி நேரத்திற்குள் ஹெலிகாப்டர் தரையிறங்கியது. ஹெலிகாப்டர் தளம் சரியான முறையில் செட் ஆகாத நிலையில் ஹெலிகாப்டரின் டயர் காங்ரீட்டில் புதைந்துள்ளது. இதையடுத்து காவல்துறையினரும், தீயணைப்பு வீரர்களும் ஹெலிகாப்டரை சிறிது தூரம் தள்ளி மீட்டனர்.



