திருவட்டாறு, ஜூலை 1 –
திருவட்டாறு அருகே ஆற்றூர் ஓயிட் நினைவு நர்சிங் கல்லூரி மற்றும் பத்மநாபபுரம் அரசு தலைமை மருத்துவமனை இணைந்து நடத்திய இரத்த தான முகாம் நடைபெற்றது. இந்த முகாமுக்கு ஒயிட் நினைவு கல்வி குழுமத்தின் தலைவர் டாக்டர் லீலாபாய் ராஜேந்திரன் தலைமை வகித்தார். நர்சிங் கல்லூரி முதல்வர் டாக்டர் சோயி சோபனா அலக்ஸாண்டர் மற்றும் மருத்துவர் கோலப்பன் ஆகியோர் முகாமை தொடங்கி வைத்தனர்.
முகாமின் தொடக்கமாக இரத்ததானம் செய்வதன் முக்கியத்துவம் மற்றும் அதனால் ஏற்படும் நன்மைகளை குறித்து இரத்த வங்கி ஒருங்கிணைப்பாளர் ராஜன் சிறப்புரையாற்றினார். முகாமை முன்னிட்டு 58 நர்சிங் கல்லூரி மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் முன்வந்து தங்களது இரத்தத்தை தானமாக வழங்கினர்.
முகாமின் முடிவில் மருத்துவர் குருதி கொடையாளர் பாராட்டு சான்றிதழ்களை இரத்த தானம் செய்த மாணவர்களுக்கு வழங்கினார். தானமாக பெறப்பட்ட இரத்தம் அனைத்தும் அரசு இரத்த வங்கிக்கு பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டது.



