திருவனந்தபுரம், அக். 22 –
ஜனாதிபதி திரவுபதி முர்மு கேரளாவில் 4 நாட்கள் சுற்றுப்பயணம் செய்கிறார்.
இதற்காக நேற்று மாலை 6.20 மணியளவில் டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் திருவனந்தபுரம் வந்த அவருக்கு விமான நிலையத்தில் கேரளா கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேக்கர், முதல்வர் பினராயி விஜயன் ஆகியோர் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர் அன்று இரவு கவர்னர் மாளிகையில் தங்கிய ஜனாதிபதி, இன்று காலை 9.35 மணியளவில் திருவனந்தபுரத்தில் இருந்து விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் சபரிமலை புறப்பட்டு செல்வார் என முதலில் அறிவிக்கப்பட்டது. ஆனால் 2 மணி நேரம் முன்பாக 7.30 மணியளவில் கவர்ணர் மாளிகையில் இருந்து புறப்பட்டார். பின்னர் விமான படை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் அவர் சபரிமலை புறப்பட்டார்.
முதலில் நிலக்கல்லில் இறங்குவார் என அறிவிக்கப்பட்டு பின்னர் கோந்நி என்ற இடத்தில் உள்ள மைதானத்தில் இறங்கினார். அங்கிருந்து கார் மூலம் பம்பை சென்றடைந்தார்.
பம்பை கணபதி கோயிலில் வைத்து இருமுடி கட்டிய பின் மேல்சாந்தி விஷ்ணு நம்பூதிரி இருமுடி கட்டை ஜனாதிபதி திரவுபதி முர்மு தலையில் வைத்தார். பின்னர் பம்பையில் கணபதி, அனுமான் கோவில்களில் தரிசனம் செய்த பின் ஜீப் மூலம் சன்னிதானம் சென்றார். அவருடன் கேரளா கவர்னர் விஸ்வநாத் ஆர்லேக்கர், அவரது மனைவி, கேரளா தேவசம் போர்டு அமைச்சர் வாசவன் உடன் சென்றனர்.
சன்னிதானத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு சபரிமலை தந்தரி கண்டரர் ராஜீவரர் தலைமையில் ஐயப்பன் கோயில் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.
தொடர்ந்து திரவுபதி முர்முவும் அவரது மெய்க்காவலர்களும் இருமுடி கட்டி சபரிமலை கோயிலில் 18ம் படி ஏறி ஐயப்பனை தரிசனம் செய்தார். இதையடுத்து சபரிமலை மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி, ஜனாதிபதியிடம் இருமுடியை பெற்றுக் கொண்டார். சபரிமலையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.



