கன்னியாகுமரி, நவ. 7 –
வந்தே மாதரம் பாடல் வெளியாகி 150 ஆண்டுகள் நிறைவு பெறுவதை ஒட்டி, கன்னியாகுமரி கடல் நடுவே அமைந்துள்ள புகழ்பெற்ற விவேகானந்தர் நினைவு மண்டபத்தில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில், நாட்டின் ஒற்றுமை மற்றும் தேசபக்தியை வலியுறுத்தும் நோக்கில், நூற்றுக்கணக்கான மாணவ, மாணவியர்கள் ஒன்று கூடி உற்சாகமாக “வந்தே மாதரம்” பாடலை ஒருமித்த குரலில் பாடினர். கடலின் மத்தியில் ஒலித்த அந்த தேசபக்தி கீதம், நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவருக்கும் பெருமிதத்தையும் ஆனந்தத்தையும் ஏற்படுத்தியது.
நிகழ்ச்சியில் விவேகானந்த கேந்திரத்தின் நிர்வாக செயலாளர் ராதா தேவி, நிர்வாக அதிகாரி அனந்தஶ்ரீ பத்மநாபன், நினைவாலய பொறுப்பு அதிகாரி தாணு, மக்கள் தொடர்பு அலுவலர் அவினாஷி காத்லே, விவேகானந்த கேந்திர வித்யாலயா முதல்வர் சரிகா, சங்கர் நாராயணன், கிருஷ்ணகுமார் உள்ளிட்ட பலர் பங்கேற்று மாணவர்களை வாழ்த்தினர்.
பின்னர், விவேகானந்தா கேந்திரா நிர்வாக அதிகரி ராதா தேவி பேசுகையில்: “வந்தே மாதரம் பாடல் இந்தியர்களின் இதயத் துடிப்பாகும். அதுவே தேசபக்தியின் அடையாளம். இத்தகைய நிகழ்வுகள் இளைஞர் தலைமுறையில் தேசப்பற்று உணர்வை மேலும் வலுப்படுத்தும்,” என்று தெரிவித்தார். இதே போல் கன்னியாகுமரி விவேகானந்த கேந்திர வளாகத்தில் அமைந்துள்ள தியாக நினைவு சுவர் பகுதியிலும் இதே போன்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் விவேகானந்த கேந்திர வித்யாலயா பள்ளியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவ மாணவியர்கள் பங்கேற்றனர்.



