நாகர்கோவில், பிப். 9 –
கன்னியாகுமரி மாவட்ட வழங்கல் அலுவலரின் உத்தரவின்படி மாவட்ட பறக்கும் படை தனி வட்டாட்சியர் பாரதி தலைமையில், ஓட்டுனர் ஜாண் பிரைட் மற்றும் பறக்கும் படை குழுவினர் கல்குளம், விளவங்கோடு வட்ட பகுதிகளில் பொது வினியோக திட்ட கடத்தல் தடுப்பு ரோந்து பணியில் இருந்தனர்.
அப்போது வெள்ளிகோடு பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக வந்து கொண்டு இருந்த சொகுசு காரை சோதனை செய்ய நிறுத்தும் படி சைகை காட்டினர். ஆனால் கார் நிற்காமல் சென்றதால் சுமார் 1 கிலோ மிட்டர் தூரம் விரட்டி சென்றனர். பின்னர் ஓட்டுனர் அதி வேகமாக சென்று இரவிபுதூர் கடை பகுதியில் சாலையோர கம்பத்தில் வாகனத்தை மோதி விட்டு ஓட்டுனர் தப்பி ஓடினார்.
தொடர்ந்து வாகனத்தை சோதனை செய்ததில் சுமார் 1500 கிலோ பொது வினியோக திட்ட அரிசி கேரளா மாநிலத்திற்கு கடத்தி செல்ல இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. கைப்பற்றபட்ட அரிசி காப்புக்காடு அரசு நுகர்பொருள் வாணிபக்கழக கிட்டங்கியில் ஒப்படைக்கப்பட்டது. கடத்தல் வாகனம் விளவங்கோடு வட்டாட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டது. சம்பவம் தொடர்பாக கடத்தல் வாகன உரிமையாளரை தேடி வருகின்றனர்.



