நாகர்கோவில், டிசம்பர் 22 –
குமரி மாவட்ட பாசன துறை தலைவர் வின்ஸ் ஆன்றோ தலைமையில் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலினிடம், குளங்களில் அத்துமீறி தாமரைப் பூக்கள் வளர்ப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் மனு அளித்தனர்.
இதுவரை பல்வேறு காவல் நிலையங்களில் அழிக்கப்பட்ட சுமார் 29 புகர்களையும் ஒருங்கிணைத்து இந்த புகார் அளிக்கப்பட்டது. பின்னர் இந்த புகார் மனு தொடர்பாக வின்ஸ் ஆன்றோ கூறியதாவது: குமரி மாவட்டத்தில் உள்ள குளங்களில் களைக்கொல்லி மருந்துகளையும் பூச்சிக்கொல்லி மருந்துகளையும் பயன்படுத்தி உச்சநீதிமன்ற உத்தரவுக்கு மாறாக தாமரை பூ வளர்த்து அதை பறித்து அதன் மூலம் லட்சக்கணக்கில் பணம் சம்பாதித்து வருகின்றனர்.
இவ்வாறு தாமரைப்பூ பறிப்பது ரவுடிகள் இடையே கோஷ்டி மோதல்களும் ஏற்பட்டு வருகின்றன. இது தொடர்பாக ஏற்கனவே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடந்த விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் வலியுறுத்தினோம்.
அப்போது நீர்வளத் துறை அதிகாரிகள் தரப்பில் காவல் நிலையங்களில் இது தொடர்பாக புகார்கள் அளிக்கப்பட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று தெரிவித்தனர். இதுவரை அளித்த புகார்களை ஒருங்கிணைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மூலமாக அளித்து அதன் அடிப்படையில் நீர்வளத்துறை மற்றும் காவல்துறை இணைந்து இது தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்வது என முடிவு செய்யப்பட்டது.
அதன் அடிப்படையில் முதல் கட்டமாக இதுவரை குமரி மாவட்ட காவல் நிலையங்களில் குளங்களில் அத்துமீறி தாமரை பூ வளர்ப்பது தொடர்பாக அளிக்கப்பட்ட சுமார் 29 புகார்களை ஒருங்கிணைத்து எஸ்பி ன் கவனத்திற்கு அளித்திருக்கிறோம்.
இந்த விவகாரத்தில் காவல்துறை, நீர்வளத்துறை இணைந்து ஒரு நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். உச்சநீதிமன்ற உத்தரவிற்கு மாறாக குளங்களில் பல்வேறு வகையான ரசாயன மற்றும் பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்தி தாமரை வளர்க்கப்படுவதால் மீன்கள் பாதிக்கப்படுகிறது. தாமரை வளர்க்க தடை விதிக்கும் நீர்வளத்துறை அதிகாரிகள் மற்றும் பாசனத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு கொலை மிரட்டல்களும் வருகின்றன. எனவே இதை தடுக்கும் வகையில் காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். சஹ கார் பாரதி குமரி மாவட்ட தலைவர் சகாயம், மற்றும் பாசன துறை நிர்வாகிகள் உடன் வந்திருந்தனர்.


