இரணியல், டிச. 12 –
நுள்ளிவிளை ரயில்வே மேம்பாலத்தை உடைத்து அதே இடத்தில் புதிய பாலம் அமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவனந்தபுரம் முதல் கன்னியாகுமரி வழித்தடத்தில் இரட்டை ரயில் பாதை அமைக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. அதன்படி நாகர்கோவில் – தோட்டியோடு – திங்கள்நகர் – புதுக்கடை மாநில நெடுஞ்சாலை நுள்ளிவிளை என்னும் இடத்தில் அமைந்துள்ள ரயில்வே மேம்பாலத்தை அதே இடத்தில் அகலமாக விரிவாக்கி புதிய மேம்பாலம் கட்ட மாவட்ட நிர்வாகம், ரயில்வே நிர்வாகம் மற்றும் நெடுஞ்சாலை துறை ஆகியவை இணைந்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
அதன் அடிப்படையில் புதிய ரயில்வே மேம்பால கட்டுமான பணிகள் கடந்த நவம்பர் மாதம் 24ம் தேதி தொடங்க இருந்தது. மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டன. மீண்டும் கடந்த 10 ஆம் தேதி நுள்ளிவிளை ரயில்வே மேம்பாலத்தின் கட்டுமான பணிகள் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதையொட்டி திங்கள்நகர் – தோட்டியோடு மாநில நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றத்திற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. ஒரு தரப்பு மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் மீண்டும் ரயில்வே மேம்பால கட்டுமான பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இதற்கு பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் மிகுந்த அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் பல்வேறு அரசியல் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்ட கூட்டம் திங்கள்நகரில் இன்று நடந்தது. கன்னியாகுமரி மாவட்ட வளர்ச்சி மற்றும் இயற்கை வளங்கள் பாதுகாப்பு பேரவை தலைவர் வே. ராஜசேகர் தலைமை வகித்தார். திமுக மாநில சிறுபான்மை பிரிவு துணைத் தலைவர் வி.ஜோசப்ராஜ், இரணியல் பேரூர் திமுக செயலாளர் சுப்பிரமணியன், மாவட்ட ஜனதா தள தலைவர் வக்கீல் அருள்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
திங்கள்நகர் வர்த்தகர் நலச் சங்க செயலாளர் செல்வராஜ், மதிமுக மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் வெற்றிவேல், மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் கிருஷ்ணன்குட்டி, தமிழக வெற்றிக் கழகம் காலிங்பிரபு, நாம் தமிழர் கட்சியை சேர்ந்த ரூபன் பொன்னுமணி, கரிகரன், சந்திரகுமார், நுள்ளிவிளை ஊராட்சி முன்னாள் துணைத் தலைவர் ராஜன், நுள்ளிவிளை ஜெ. ஜோசப்ராஜ், சுரேஷ் உட்பட கலந்து கொண்டனர்.
திட்டமிட்டபடி கட்டுமான பணிகளை மேற்கொள்ளாமல் அடிக்கடி முந்தின நாளில் நிறுத்தி வைப்பதால் பொதுமக்கள் பாதிப்புக்கு ஆளாகின்றனர். அரசுக்கு வீண் பண விரயம் ஏற்பட்டு மக்களின் வரிப்பணம் வீணாகிறது. தற்போதைய நுள்ளிவிளை மேம்பாலம் அமைந்துள்ள பகுதியில் 30க்கும் மேற்பட்ட வீடுகள் பாதிக்காத வகையில், மக்களின் வரிப்பணம் ரூ. 100 கோடிக்கு மேல் வீணாகுவதை தடுக்கும் வகையில் தற்போதைய மேம்பாலம் இருக்கும் இடத்தில் அதை அகற்றிவிட்டு அகலமான விரிவான ரயில்வே மேம்பாலம் கட்டப்பட வேண்டும் என்கிற பெரும்பான்மை மக்களின் விருப்பத்தை நிறைவேற்றி தரும் வகையில் மாவட்ட நிர்வாகமும் ரயில்வே நிர்வாகமும் நெடுஞ்சாலை துறையும் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்.
நுள்ளிவிளை ரயில்வே மேம்பாலத்தை அகற்றி விட்டு அதே இடத்தில் புதிய ரயில்வே மேம்பாலம் கட்டுமான பணியை உடனே ஆரம்பிக்க வேண்டும். இலகுரக வாகனங்கள், பைக்குகள், ஆட்டோக்கள் சிரமமின்றி செல்லும் வகையில் பேயன்குழி, வடக்கு நுள்ளிவிளை 4 வழிச்சாலை, குதிரைப்பந்திவிளை, வில்லுக்குறி செல்லும் இரட்டைக்கரை சானல் கரை சாலையை சீரமைத்து சீரான வாகன போக்குவரத்துக்கு வசதி ஏற்படுத்தி தரவேண்டும். மாவட்ட நிர்வாகம் ஏற்கெனவே திட்டமிட்டபடி திங்கள்நகர் – நாகர்கோவில் சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யவும் கேட்டுக்கொள்கிறோம். மக்களின் நலம் சார்ந்த பிரச்சினைகளில் வீண் ஆதாயம் தேடும் தவறான நடவடிக்கைகளில் எவரும் ஈடுபட வேண்டாம் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. வழக்கறிஞர் புஷ்பாகரன் நன்றி கூறினார்.
முன்னதாக நுள்ளிவிளை சாலையை பயன்படுத்துவோர் கலந்து கொண்ட கருத்து கேட்பு கூட்டம் நடந்திருந்தது. அப்போது பழைய ரயில்வே பாலத்தை உடைத்து அதே இடத்தில் புதிய பாலம் அமைக்க வேண்டும். மாற்றுப் பாலம் அமைக்க வேண்டும். புதிய ரயில்வே பாலம் அமைக்க வேண்டும் என்ற 3 கோரிக்கைகள் வைக்கப்பட்டன. அதிலும் பலர் கலந்து கொண்டனர்.
இது குறித்து மாவட்ட ஜனதா தள தலைவர் வழக்கறிஞர் அருள்ராஜ் கூறும் போது; அரசு திட்டமிட்டபடி பழைய பாலத்தை உடைத்து அதே இடத்தில் புதிய பாலத்தை அமைக்கும் பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும். அல்லாத பட்சத்தில் அரசியல் கட்சிகளை ஒருங்கிணைத்து மிகப்பெரிய அளவில் உண்ணாவிரதம் போராட்டம் நடத்துவோம். இது சம்பந்தமாக நாளை (இன்று) மாவட்ட கலெக்டரை சந்தித்து முறையிட உள்ளோம் என்றார்.



