மார்த்தாண்டம், டிச. 26 –
களியக்காவிளை அருகே உள்ள மெது கும்மல் பகுதியை சேர்ந்தவர் ஜெர்ரி (28). ஆந்திர மாநிலத்தில் உள்ள சட்டக் கல்லூரியில் படித்து வருகிறார். இவரது மனைவி ஷாகினியா. இவர்களுக்கு திருமணம் ஆகி 2 மாதங்கள் தான் ஆகிறது. இந்த நிலையில் கிறிஸ்மஸ் பண்டிகைக்காக சொந்த ஊருக்கு ஜெர்ரி நேற்று வந்துள்ளார்.
இரவு குழித்துறையில் உள்ள ஒரு தனியார் மதுபான விடுதிக்கு சென்றுள்ளார். பின்னர் அங்கு நடந்த பார்ட்டியில் கலந்து கொண்டு அதிக அளவில் மது குடித்ததாக கூறப்படுகிறது. அப்போது போதை தலைக்கேறிய பின் தள்ளாடியபடி நடந்து சென்ற ஜெர்ரி மதுபான விடுதியின் பின்புறம் உள்ள ஆற்றில் குதித்து விட்டதாக தெரிகிறது. இதனால் அவர் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார். இது குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தீயணைப்பு படை வீரர்கள் ஆற்றில் மாயமான ஜெர்ரியை தேடும் பணியில் ஈடுபட்டனர். எனினும் இதுவரையிலும் ஜெர்ரியை கண்டுபிடிக்க முடியவில்லை. தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த சம்பவம் குறித்து களியக்காவிளை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



