நல்லூர், டிசம்பர் 1 –
குமரி மாவட்டம் நல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட இளைய நாயனார் குளம், தமிழ் நகர், தாணுமாலயன் புதூர் போன்ற பகுதிகளில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதியில் உள்ள பெண்கள், மாணவர்கள், வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் பல்வேறு காரணங்களுக்காக பல்வேறு பகுதிகளுக்கு செல்ல வேண்டுமெனில் இளைய நயினார் குளம் சந்திப்பு பகுதிக்கு வந்து தான் செல்ல வேண்டி உள்ளது.
இந்நிலையில் இளைய நயினார் குளம் சந்திப்பிலிருந்து அவர்கள் ஊருக்கு செல்லும் சாலையில் உள்ள தெருவிளக்குகள் ஒன்று கூட எரியாமல் இருள் சூழ்ந்து காணப்படுவதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனர். மேலும் இரவு நேரங்களில் இருள் சூழ்ந்து காணப்படுவதால் மது பிரியர்கள் ஒன்றாக அமர்ந்து மது அருந்தி வருவது தொடர் கதையாக உள்ளது. இதனால் அப்பகுதி வழியாக செல்லும் பெண்கள், மாணவிகள் பெரும் அச்சத்துடனே அந்த இடத்தை கடந்து செல்கின்றனர்.
மேலும் இருள் சூழ்ந்ததை பயன்படுத்தி அப்பகுதியில் வழிப்பறி, திருட்டு போன்ற சம்பவங்கள் நடைபெற அதிக வாய்ப்பு உள்ளது. எனவே பொதுமக்களின் நலன் கருதி அப்பகுதியில் உள்ள மின்விளக்குகள் சரி செய்ய நல்லூர் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


