மார்த்தாண்டம், செப். 10-
கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கொல்லங்கோடு நகராட்சியில் உள்ள வார்டு 3-ல் சவரிகுளம் செல்லும் சாலையில் பக்கச்சுவர் அமைக்க வேண்டும், வார்டு 6 – ல் சித்திரவிளை – ஆனாடு சானல் கரையில் பக்கச்சுவர் அமைக்க வேண்டும், அரசு நடுநிலை பள்ளி லெட்சுமி புதுக்கடையில் மாணவ, மாணவிகள் பயன்பாட்டிற்கு கழிவறை அமைக்க வேண்டும் ஆகிய மேற்காணும் பணிகளை சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்ட நிதியிலிருந்து செய்து தரவேண்டும் என்று இப்பகுதியில் உள்ள பொதுமக்கள், மற்றும் இளைஞர்கள், பள்ளி தலைமையாசிரியர், பள்ளி மேலாண்மை குழு நிர்வாகிகள் ஆகியோர் கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ விடம் கோரிக்கை விடுத்தனர்.
இதனையடுத்து இந்த பணிகளை செய்வதற்கு வார்டு 3 – ல் சவரிகுளம் செல்லும் சாலையில் பக்கச்சுவர் அமைத்து மேம்பாடு செய்வதற்கு ரூ. 15.00 லட்சமும், வார்டு 6 – ல் சித்திரவிளை – ஆனாடு சானல் கரையில் பக்கச்சுவர் அமைத்து மேம்பாடு செய்வதற்கு ரூ.10 லட்சம், அரசு நடுநிலை பள்ளி லெட்சுமி புதுக்கடையில் மாணவிகளுக்கு கழிப்பறை கட்டிடம் மேம்பாடு செய்வதற்கு ரூ.5. லட்சமும் என மொத்தம் ரூ. 30 லட்சம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்ட நிதியிலிருந்து ஓதுக்கீடு செய்தார். இதனையடுத்து இன்று இந்த பணிகளை கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ. வைத்து தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் கொல்லங்கோடு நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் பால்ராஜ், முன்னாள் இளைஞர் காங்கிரஸ் மாவட்ட துணை தலைவர் ராஜேஷ், மாவட்ட நிர்வாகிகள் டென்னிஸ், அருளானந்தம், அசோகன், ஸ்டீபன், நிர்வாகிகள் துளசிதரன், பைஜூ, மோகனன், ஷாபு, சபரிகுமார், கொல்லங்கோடு நகர இளைஞர் காங்கிரஸ் கமிட்டி தலைவர் பிரபின், கொல்லங்கோடு நகராட்சி துணை தலைவர் பேபி, நகராட்சி கவுன்சிலர்கள் டெல்மா, கவிதா மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள், பொது மக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



