நாகர்கோவில், ஜன. 16 –
நாகர்கோவில், சரலூரில் நேற்று இரவு பொங்கல் நிகழ்ச்சிகள் நடந்தது. அப்போது சிறுவர் சிறுமிகளுக்கான கலை நிகழ்ச்சிகள் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் அதே பகுதியை சேர்ந்த டெம்போ டிரைவர் ரமேஷ் உட்பட பலர் சத்தம் போட்டு ஆட்டம் போட்டதாக கூறப்படுகிறது. இதை கோட்டார் செந்தூரான் நகர் பகுதியை சேர்ந்த டெம்போ டிரைவர் முகேஷ் கண்ணன் உட்பட சிலர் தட்டி கேட்டுள்ளனர். இதனால் அவர்களிடையே முன் விரோதம் ஏற்பட்டது.
இந்த நிலையில் முகேஷ் கண்ணன் வீட்டுக்கு சென்று விட்டார். கலை நிகழ்ச்சியின் போது தங்களிடம் தகராறு செய்த முகேஷ் கண்ணன் மீது ரமேசுக்கு ஆத்திரம் ஏற்பட்டது. தொடர்ந்து ரமேஷ், அவர் நண்பர் மணிகண்டன் ஆகியோர் முகேஷ் கண்ணன் வீட்டுக்கு சென்று அவரை தாக்கியதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த முகேஷ் கண்ணன் வீட்டிலிருந்து அரிவாள் எடுத்து வந்து ரமேஷை சரமாரியாக வெட்டினார். இதனை தடுத்த மணிகண்டனுக்கும் வெட்டு விழுந்தது. இதில் ரமேஷ் சம்பவ இடத்தில் உயிரிழந்தார். உடனடியாக கோட்டார் போலீசருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மணிகண்டனை மீட்டு குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது அவரும் கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் ரமேஷ் உடல் பிரேத பரிசோதனைக்காக குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்த கொலை குறித்து ரமேஷின் சகோதரர் சுரேஷ் கொடுத்த புகாரின் பேரில் கோட்டார் போலீசார் வழக்கு பதிவு செய்து முகேஷ் கண்ணனை கைது செய்தனர். கொலை செய்யப்பட்ட டெம்போ டிரைவர் ரமேஷ் மனைவி கடந்த 20 நாட்களுக்கு முன்பு உடல் நலம் பாதிக்கப்பட்டு இறந்தது குறிப்பிடத்தக்கது. ரமேஷுக்கு பத்தாம் வகுப்பு எட்டாம் வகுப்பு படிக்கும் இரண்டு மகன்கள் உள்ளனர்.



