பூதப்பாண்டி, ஆக. 14 –
கன்னியாகுமரி மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக பாலமோர் ஊராட்சிக்கு உட்பட்ட மக்களுக்கு இந்த முகாம் கீரிப்பாறை பகுதியில் நடத்தப்பட்டது. இந்த முகாமில் மகளிர் உரிமைத் தொகை, கலைஞர் உரிமைத்தொகை, பட்டா மாறுதல் பல்வேறு திட்டங்களால் பொதுமக்கள் பயன்பெற்று வருகின்றனர். இந்த ஊராட்சியில் 1500 க்கு மேற்பட்ட மலைவாழ் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்களின் தொழில் கிராம்பு, ஜாதிக்காய், மிளகு போன்றவற்றை பயிரிட்டு வருகின்றனர்.
மேலும் இப்பகுதியில் உள்ள கீரிப்பாறை காரிமணி சாலை கடந்த 30 வருடமாக மிகவும் மோசமாக உள்ளது. இதனால் குழந்தைகள் பள்ளிக்கு செல்ல முடியாமலும் நோயாளிகள் மருத்துவமனைக்கு செல்ல முடியாமலும் அவதிப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் பொதுப்பணித்துறை அதிகாரியிடம் பலமுறை கோரிக்கை வைத்து 2024-ம் ஆண்டு மாவட்ட பொறியாளரால் 6 கோடி 60 லட்ச ரூபாய் ஒதுக்கப்பட்டு மதிப்பீடு செய்யப்பட்டது. தற்போதைய பொறியாளர் அந்த மதிப்பீடு ரத்து செய்துவிட்டு சாலையை ஒட்டு போடும் பணிக்கு 65 லட்ச ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் வேதனை மன உளைச்சலையும் ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மலைவாழ் மக்கள் சாலையை செப்பனிட கேட்டு அதிகாரியிடம் மனு கொடுத்தனர். மேலும் இன்னும் 30 நாட்கள் சாலையை செப்பனிடாவிட்டால் நாகர்கோவிலுள்ள அம்பேத்கர் சிலை முன்பு காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் இருப்பதாக தெரிவித்தனர்.



