கோவை மாவட்டம் காரமடை, டாக்டர். ஆர்.வி. கலை அறிவியல் கல்லூரியில் சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு உள்தர மதிப்பீட்டு அமைப்பு, இளைஞர் செஞ்சிலுவை சங்கம் மற்றும் நாட்டு நலப் பணித்திட்டத்தின் சார்பாக போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் கல்லூரி முதல்வர் முனைவர்.சி. என்.ரூபா அவர்கள் தலைமையேற்று போதைப்பொருளினால் உண்டாகும் தீமைகள் குறித்து மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார். அவர் பேசிய உரையில்,”இன்றைய இளைஞர்கள் சமுதாயத்தில் போதைப்பொருள் கலாச்சாரம் பெருகி வருகிறது. போதை பொருள்களினால் தனிமனித வாழ்வு சீரழிவதோடு நாட்டின் பொருளாதாரமும் சீர்குலைகிறது. போதைப் பொருள் பழக்கம் மூளையை மழுங்கச் செய்வதோடு புத்தியை தடுமாறச் செய்யும். இதனை உபயோகிப்பவர்கள் விளக்கில் விழும் எட்டில் பூச்சிகளாய் தங்கள் வாழ்வை தொலைக்கின்றனர். குறிப்பாக இளைஞர்கள் இப்பழக்கம் தங்களை பெரும் அழிவுப்பாதையில் அழைத்துச் செல்லும் என்பதை உணர்வதில்லை. இப் பழக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களை மீட்டெடுக்கவும், இதற்கான காரணிகளை கண்டறிந்து இதனை முளையிலேயே கிள்ளி எறியவும் நாம் பாடுபட வேண்டும் “என்று பல கருத்துக்களை எடுத்துரைத்தார். இதனைத் தொடர்ந்து கல்லூரி மாணவிகள் பங்கேற்று மௌன மொழி நாடகம் நடித்துக் காட்டியும், மூன்றாம் ஆண்டு தகவல் தொழில்நுட்பவியல் துறை மாணவி செல்வி. ஷாலினிப்ரியா மற்றும் கணினிசார் வணிகவியல் துறை மாணவன் செல்வன்.சதீஷ் ஆகியோர் பங்கேற்று போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு கருத்துக்களை வழங்கியும் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்நிகழ்வு கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு மிகவும் பயனுள்ள வகையில் அமைந்திருந்தது. இந்நிகழ்வுக்கான ஏற்பாடுகளை கணிதவியல் துறைத்தலைவரும், நாட்டு நலப்பணித்திட்ட அலுவலருமான திருமதி.உமாபிரியா அவர்கள் செய்திருந்தார்



