நாகர்கோவில், ஜன. 20 –
குமரி மாவட்ட வழங்கல் அலுவலர் மேற்பார்வையிலான பறக்கும் படை தனித் தாசில்தார் பாரதி, ஊழியர் ஜான் பிரைட் கொண்ட பறக்கும் படை குழுவினர் இன்று அதிகாலை நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பு முதல் கோர்ட் ரோட்டில் வாகன தணிக்கையில் இருந்தனர்.
அப்போது வேப்ப மூடு சந்திப்பில் காய்ந்த வாழை இலை தண்டுகளுடன் வந்து கொண்டிருந்த டெம்போவை சோதனை செய்வதற்காக நிறுத்தும்படி சைகை செய்தனர். ஆனால் அந்த வாகனம் நிற்காமல் சென்றது. இதை அடுத்து வாகனத்தை பறக்கும் படையினர் துரத்தி நீதிமன்ற சாலையில், எஸ்எல்பி பள்ளி அருகில் செல்லும் போது டிரைவர் வண்டியை நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார்.
இதையடுத்து பறக்கும் படையினர் வாகனத்தை சோதனை செய்ததில் அதில் சுமார் 3500 கிலோ ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கேரளாவுக்கு கடத்தி செல்ல திட்டமிட்டு இதை கொண்டு வந்துள்ளனர். இதை அடுத்து வாகனம் மற்றும் அரிசி மூடைகளை கலெக்டர் அலுவலகத்தில் கொண்டு சென்றனர்.
பின்னர் கைப்பற்றப்பட்ட அரிசி மூடைகள் கோணம் அரசு கிட்டங்கியில் ஒப்படைக்கப்பட்டது. கடத்தல் வாகனம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டது. வாகன பதிவு எண் மூலம் அதன் உரிமையாளர் மற்றும் டிரைவரை தேடி வருகிறார்கள்.



