நாகர்கோவில், மார்ச் 9 –
நாகர்கோவில் வடசேரி பகுதியில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் பிரதான தலைமை கிளை அலுவலகம் உள்ளது. இந்த வங்கியின் தலைமை மேலாளராக கோட்டார் பகுதி சேர்ந்த சுப்பிரமணியன் (46) என்பவர் உள்ளார். இவர் கன்னியாகுமரி மாவட்ட போலீஸ் எஸ்பி இடம் ஒரு புகார் அளித்தார்.
அந்த புகாரில் கூறி இருப்பதாவது: தக்கலை கல்குறிச்சியை சேர்ந்த ரகுவரன் (36) என்பவர் எங்கள் வங்கியின் நகை மதிப்பீட்டாளராக உள்ளார். எங்கள் வங்கியில் 3 மாதங்களுக்கு ஒரு முறை நகைகளை சோதனையிடுவது வழக்கம். அதேபோல் கடந்த 7.3.2026 அன்று நகைகளை சோதனை செய்த போது சில நகைகள் மீது தணிக்கை குழுவுக்கு சந்தேகம் வந்தது.
இதையடுத்து அந்த நகைகளை ஆய்வு செய்ய அனுப்பி வைத்தோம். அப்போது நகைகள் போலி நகைகள் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரித்த போது நகை மதிப்பீட்டாளரான ரகுவரன் போலி நகைகளை அடகு வைத்து அதற்கு ஈடாக பணம் பெற்றுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. அந்த வகையில் 2 கோடியே 10 லட்சத்து 18 ஆயிரத்து 400 ரூபாய் மோசடி செய்துள்ளார். எனவே இது தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும் என புகார் மனுவில் கூறியிருந்தார்.
புகாரின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க மாவட்ட எஸ்பி வடசேரி போலீசாருக்கு உத்தரவிட்டார். வடசேரி போலீசார் விசாரணை நடத்தி, தற்போது நகை மதிப்பீட்டாளரான ரகுவரன் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.



