நாகர்கோவில், ஜன. 5 –
குமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா தலைமையில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பொது மக்களிடமிருந்து கல்வி உதவித்தொகை, பட்டா பெயர் மாற்றம், மாற்றுத்திறனாளி நல உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, குடிநீர் வசதி, சாலை வசதி, கலைஞர் மகளிர் தொகை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் கோரி 280 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட அனைத்து கோரிக்கை மனுக்கள் மீது விரைந்து தீர்வு காணுமாறு துறைசார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
தொடர்ந்து 5 மாற்றுத்திறன் பயனாளிகளுக்கு தலா ரூ.1,14,400 மதிப்பிலான பேட்டரியால் இயங்கும் சிறப்பு சக்கர நாற்காலிகளை வழங்கப்பட்டது. மேலும் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு கொடிநாள் 2023ம் ஆண்டிற்கு 07.12.2024 முதல் 06.12.2025 வரை இலக்காக ரூ.1,40,90,000 நிர்ணயம் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து நமது மாவட்டம் ரூ.1,41,48,146 வசூல்புரிந்து இலக்கின் 100 சதவீதத்தினை தாண்டி வசூல் புரிந்து சாதனை படைத்தது. இதனை பாராட்டும் விதமாக அரசால் மாவட்ட ஆட்சித்தலைவருக்கு வெள்ளி கேடயம் வழங்கப்பட்டது. தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்ட வெள்ளி பதக்கத்தினை முன்னாள் படை வீரர் துணை இயக்குனர் மாவட்ட ஆட்சித்தலைவரிடம் ஒப்படைத்தார்.
நடைபெற்ற கூட்டத்தில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திரு.மைக்கேல் அந்தோணி பெர்னான்டோ, பத்மநாபபுரம் சார் ஆட்சியர் தவினய்குமார் மீனா, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சுகிதா, நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் எஸ்.காளீஸ்வரி, உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.



