கன்னியாகுமரி, ஜன. 30 –
தேசப்பிதா மகாத்மா காந்தியின் 79-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி கன்னியாகுமரி கடற்கரையில் உள்ள காந்தி நினைவு மண்டபத்தில் பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ், மேயர் மகேஷ், நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் காளீஸ்வரி, நகராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
தொடர்ந்து அமைச்சர் மனோ தங்கராஜ் செய்தியாளர்களிடம் பேசுகையில்: இந்த நாட்டின் சுதந்திரத்திற்காக அகிம்சை வழியை கடைபிடித்த காந்தியடிகளுக்கு மகாத்மா என்ற பட்டம் உலக மக்களால் வழங்கப்பட்டது.
இன்றைக்கு காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சாவர்க்கரை தூக்கி பிடிக்கின்ற பாஜகவை மக்கள் ஒட்டுமொத்தமாக புறக்கணிக்க வேண்டும் என்று இந்த நல்ல தருணத்தில் நான் நாட்டு மக்களுக்கு என்னுடைய ஒரு ஜனநாயக கடமையோடு ஒரு வேண்டுகோளை வைக்கின்றேன்.
காங்கிரஸ் கட்சி திராவிட இயக்கத்தினுடைய அடிப்படை கொள்கையான இந்த சமத்துவத்தையும் சமூக நீதியையும் நிலைநாட்ட வேண்டும் என்ற கொள்கையில் அவர்கள் உடன்பாடோடு இருக்கிறார்கள். ஆனால் அதிமுக அப்படி அல்ல. அவர்களின் கட்சி பஞ்சாயத்தை தீர்க்க டெல்லியில் போய் காலில் விழுந்தார்கள்.
தமிழ்நாட்டினுடைய பல உரிமைகள் பறிக்கப்படுகின்ற நேரத்தில் இன்றைக்கு கைகட்டி, வாய் மூடி, மௌனியாக கண்ணிருந்தும் காணாமல், வாயிருந்தும் பேசாமல், காதிருந்தும் கேளாமல் இருக்கக்கூடிய ஒரு நிலையில் எடப்பாடி இருந்து கொண்டு அவருடைய கட்சியை மட்டுமல்ல தமிழ்நாட்டு மக்களுடைய உணர்வுகளையும் அங்கே கொண்டு அடிமைப்படுத்திட்டார்.
அதைத்தான் நாங்கள் எதிர்க்கின்றோம்.
மகாராஷ்டிராவில் கூட இன்று மராத்தி மொழிக்கு தான் முக்கியத்துவம் கொடுப்போம் என்று சொல்லி விட்டார்கள். எல்லா மாநிலங்களிலும் இந்த நிலை வரப்போகுது. நாங்கள் எங்களது நிலைப்பாட்டில் இருந்து கடுகளவும் குறுகியது கிடையாது என அமைச்சர் கூறினார்.



