சுசீந்திரம், நவ. 10 –
சுசீந்திரம் அருகே உள்ள புத்தளம் சேதுபதி ஊர் பகுதியில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் அரசு அனுமதி பெறாமல் செம்மண் கடத்துவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பெயரில் அதிரடி நடவடிக்கையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் தலைமையிலான போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று பார்க்கும் போது தனியாருக்கு சொந்தமான நிலத்தில் நள்ளிரவு ஆறு டாரஸ் லாரிகளும் ஒரு ஜேசிபி இயந்திரம் மூலம் செம்மண் ஏற்றியது தெரிய வந்தது.
உடனடியாக அந்த ஆறு டாரஸ்லாரிகளையும் மண் எடுத்த ஒரு ஜேசிபி இயந்திரத்தையும் ஒரு இருசக்கர வாகனத்தையும் மடக்கி பிடித்து சுசீந்திரம் காவல்நிலையம் கொண்டு வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே கன்னியாகுமரி மாவட்டத்தில் கனிம வளங்கள் சுரண்டப்படுவதாக பொதுமக்கள் புகார் கூறி வந்த நிலையில் மாவட்ட கண்காணிப்பாளரின் அதிரடி நடவடிக்கை பொதுமக்களிடம் வரவேற்பு பெற்றுள்ளது.



