மார்த்தாண்டம், டிச. 1 –
திருவட்டார் அருகே உள்ள திருவரம்பு பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ். இவர் கடந்த 25 ஆண்டுகளாக குடும்பத்துடன் துபாயில் வசித்து வருகிறார். திருவரம்பில் உள்ள அவரது வீட்டை உறவினர் ஒருவர் மாதத்துக்கு ஒரு முறை வந்து சுத்தம் செய்துவிட்டு செல்வது வழக்கம். இந்த நிலையில் செல்வராஜன் தந்தை கடந்த சில நாட்களுக்கு முன்பு இறந்தார். இதை அடுத்து மனைவியுடன் வெளிநாட்டிலிருந்து சொந்த ஊருக்கு வந்தார். அப்போது வீட்டில் பார்த்தபோது வீட்டில் இருந்த 120 பவுன் தங்க நகைகள் காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்தவர் தனது உடன் பிறந்த சகோதரர்கள் மற்றும் உறவினர்களிடம் கேட்டுள்ளார். ஆனால் அதை பற்றி தங்களுக்கு எதுவும் தெரியாது என்று அவர்கள் கூறிவிட்டனர்.
இதையடுத்து செல்வராஜ் திருவட்டார் போலீசில் புகார் அளித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்களுடன் சென்று பார்வையிட்டனர். நகைகள் மாயமான சம்பவம் எப்போது நடந்தது என்பது சரியாக தெரியவில்லை. உறவினர்கள் யாராவது தான் செல்வராஜ் வீட்டுக்குள் புகுந்து நகைகளை எடுத்துச் சென்றிருக்க வேண்டும் என சந்தேகம் எழுந்துள்ளது. இது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். மாயமான 120 பவுன் நகைகளின் மதிப்பு ஒரு கோடி ரூபாய் என கூறப்படுகிறது.


